பேரரசுவின் திகாரை விட ஒரிஜினல் திகார் அதி பயங்கரமானது.. ஏன் இந்த அவல நிலை?
டெல்லி: டெல்லி திகார் சிறைச்சாலை இப்போது அதி பயங்கர மரணக் களமாக மாறி வருகிறது. நாட்டிலேயே அதி உயர் பாதுகாப்பு சிறை என்ற பெயரைப் பெற்ர இந்த சிறைக்குள் இருக்கும் கைதிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
இங்கு தற்போது உயிர் உதிரும் காலமாக இருக்கிறது. அடிக்கடி மரணங்கள் சம்பவிக்கின்றன. இந்த ஆண்டு இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
கோஷ்டி மோதல், போதைக் கும்பல்களின் மோதல், உடல் நலக்கோளாறு, தற்கொலைகள் காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இது திகார் சிறை மீதான இமேஜைத் தகர்ப்பதாக உள்ளது.

ஆசியாவின் மிகப் பெரிய சிறை
ஆசியாவிலேயே மிகப் பெரிய சிறை திகார் சிறையாகும். அதி உயர் பாதுகாப்பு கொண்டது. இங்கு மிக மிக பிரபலமானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பல முக்கியக் கைதிகளின் உறைவிடமாகவும் இது உள்ளது.

சில வருடமாக நேரம் சரியில்லை
ஆனால் இந்த சிறைக்கு கடந்த சில வருடங்களாக நேரம் சரியில்லை. பல தவறான காரணங்களால் தொடர்ந்து திகார் சிறை செய்திகளில் அடிபடுகிறது.

கோஷ்டி மோதல் அதிகரிப்பு
சிறைக்குள் அடிக்கடி கோஷ்டிப் பூசல் நடக்கிறது. மோதல்கள் நடக்கின்றன. செல்போன் புழக்கம் அதிகரித்திருப்பதால் உள்ளே இருந்தபடியே பலர் வெளியில் சட்டவிரோதமான காரியங்களை கச்சிதமாக செய்து வருகிறார்கள்.

ஆள் கடத்தல் அதிகரிப்பு
ஆன்லைனில் வர்த்தகம் செய்வது போல திகார் சிறைக்குள் இருந்தபடியே பலர் ஆள் கடத்தல், பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஆசிரம் இல்லை.. இப்போது சிறை
முன்பு திகார் சிறையை ஆசிரமம் என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு ஒழுக்கமும், கண்டிப்பும், மிகுந்ததாக இது இருந்தது. கிரண் பேடி காலத்தில் ஏற்பட்ட இந்த பண்பாடு தொடர்ந்து வந்தது. இப்போது இது மாறி விட்டது.

அதிகரிக்கும் மரணங்கள்
தற்போது இங்கு மரணங்கள் அதிகரித்து விட்டன. இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். சில மரணங்கள் மர்மமாக உள்ளன. சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சில தற்கொலைகளும் நடந்துள்ளன.

2014ல் 25 பேர்
கடந்த ஆண்டு 25 பேர் மரணமடைந்தனர். இதில் பல கொலைகள்தான். அதாவது கோஷ்டிப் பூசலால் நடந்த கொலைகள். பிளேடுகளை வைத்துத்தான் பலர் கொலை செய்யப்பட்டனர்.

பிளேடு வைத்துத் தாக்குதல்
கொலை செய்ய பெரிய பெரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக சாதாரண பிளேடுகளை வைத்து அறுத்தும், குத்தியும், ரத்தப் போக்கை அதிகரித்து கொலை செய்கின்றனர்.

வெளியிலிருந்து வரும் முன்விரோதம்
வெளியில் பல்வேறு வகையில் முன்விரோதத்துடன் இருக்கும் குற்றவாளிகள் கைதாகி சிறைக்குள் வந்ததும் அதைத் தொடர்கிறார்கள். அதில்தான் பல கொலைகள் நடந்துள்ளனவாம்.

25 பேரில் 7 பேருக்கு பிளேடு தாக்குதல்
கடந்த ஆண்டு உயிரிழந்த 25 பேரில் 7 பேர் பிளேடு தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆவர். 2012ல் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிறை நிர்வாகத்தில் ஊழல்
சிறை நிர்வாகமும் இப்போது கறை படிந்து காணப்படுகிறது. கைதிகளிடம் லஞ்சம் வாங்கும் செயல் அதிகரித்துள்ளது. சமீபத்தில் 30 ஊழியர்கள் பல்வேறு புகார்களின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சுகாதார சீர்கேடு
சிறைக்குள் சுகாதார சீர்கேடும் அதிகரித்துள்ளது. கடந்த 2011ல் 340 கைதிகளுக்கு எச்ஐவி பாசிட்டிவ் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கைதிகளுக்கு ரெகுலராக மருத்துவப் பரிசோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டது.

துப்புறவுத் தொழிலாளர்கள் பற்றாக்குறை
சிறையில் துப்புறவுத் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை உள்ளது. 30 பணியிடங்கள் காலியாக உள்ளன. சிறையைச் சுத்தம் செய்ய 90 பேர் தேவையாம். ஆனால் 60 பேர்தான் உள்ளனராம்.

கூட்டம் அதிகம்
திகார் சிறையில் அளவுக்கு அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு 6200 பேர் வரை அடைக்கலாம். ஆனால் தற்போது 14,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களைச் சமாளிப்பது கடும் சிரமமாக உள்ளது. கைதிகளுக்கிடையே மோதல் வந்தால் சமாளிப்பது பாதுகாவலர்களுக்கு சிரமமாகி விடுகிறது.

எதற்கெடுத்தாலும் சிறையில் போட்டால் எப்படி
கோர்ட்டுகளும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள். சிறு குற்றத்திற்குக் கூட ரூ. 6000 உத்தரவாதத் தொகையை விதிக்கிறது கோர்ட். அதைச் செலுத்தத் தவறினால் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார்கள். இப்படித்தான் பலர் வந்து திகார் சிறையில் குவிந்துள்ளனராம். திகார் சிறையை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் குரல்கள் வந்தவண்ணம் உள்ளன.












Click it and Unblock the Notifications