ரஞ்சன் கோகோய்.. உச்சநீதிமன்றத்திலிருந்து ஓங்கி ஒலித்த கலகக் குரல்!
சென்னை: ஒரு ஜனநாயக நாட்டில் தனி மனிதன் ஒருவனுக்கு அடுத்த வீட்டுக்காரன் முதல் அரசாங்கம் வரை அநீதி இளைத்தாலும் அவனது கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள் மீது இருக்கும். இந்த நம்பிக்கையை நமது கீழமை நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றங்கள் வரை பெரும்பாலும் காத்தே வந்திருக்கின்றன. காத்திரமான பல்வேறு தீர்ப்புகளை வழங்கி சமூக நீதியை வழங்கியதோடு ஆளும் அரசுகளுக்கு அவ்வப்போது கண்டனங்களையும் தெரிவித்தே வந்துள்ளன. இவையெல்லாம் இருந்தாலும் நீதிமன்றங்கள் மீது பல தளங்களில் இருந்து அதிருப்தி நிலவுவதையும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.
நீதிமன்றங்கள் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கின்றன என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்திற்கு வெளியிலிருந்து மட்டுமல்லாது நீதிமன்றத்திற்கு உள்ளேயிருந்தும் கேட்பதுதான் கவலையளிக்கும் அம்சமாக மாறி வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை தனது பணியை முடித்துவிட்டு ஓய்வு பெற்றார் இந்திய தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய தீபக் மிஸ்ரா. அவரையடுத்து புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பொறுப்பேற்றுள்ளார்.
இப்போதெல்லாம் நீதிமன்றங்களில் ஒரு வழக்கறிஞர் வழக்கிலே வெற்றி பெற வேண்டுமென்றால் அவருக்கு சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கவேண்டும் என்பதல்லாமல் நீதிபதிகளை நன்கு தெரிந்தவராக இருந்தாலே போதும் என்ற எண்ணம் வழக்கறிஞர்கள் பலருக்கு மனதில் பதிந்து போன பாடமாக இருக்கின்றது. ஆனால் நீதிமன்றங்களில் நிலைமை இதுக்கும் ஒருபடி மேலே சென்று தலைமை நீதிபதியே ஒரு வழக்கின் தீர்ப்பு எப்படி வரவேண்டும் என்று எண்ணுகிறாரோ அதற்கேற்ற வகையில் அந்த வழக்கை குறிப்பிட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கோ அல்லது குறிப்பிட்ட நீதிபதிகளுக்கோ ஒதுக்குகிறார் என்ற குற்றசாட்டும் நிலவி வருகிறது. இது சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் புதிதல்ல. நீதிபதி கர்ணனும் ஒரு குறிப்பிட்ட வழக்குப் பிரிவை தனக்கு ஒதுக்க சொல்லி தலைமை நீதிபதியிடம் கேட்டபோதுதான் பிரச்சனை எழுந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
போர்க்குரல் எழுப்பிய நால்வர்
இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் 12 -ம் தேதி உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, ஜனநாயகம் இல்லை என மூத்த நீதிபதிகள் 4 பேர் கூட்டாக சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்து பெரும் பரரபரப்பை ஏற்படுத்தினர். இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை நிகழாத நிகழ்வாக செய்தியாளர்கள் வழியாக மக்கள் மன்றத்தில் பேசிய நீதிபதிகள் "இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கவலையை மக்களுக்கு கூற விரும்பியதால் செய்தியாளர்களை சந்தித்தோம் எனக் கூறிய அந்த 4 நீதிபதிகளும் இந்தப் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நேரில் சந்தித்து வலியுறுத்தியதோடு அவருக்கு கடிதமும் எழுதி எவ்வித பலனும் இல்லாத நிலையிலேயே மக்களுக்கு சில விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக செய்தியாளர்களை சந்தித்தாக கூறியுள்ளனர்
நாடே பாதிக்கப்படும்
நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஜனநாயகம் இல்லையென்றால், நீதிமன்றம் மட்டுமின்றி நாடே பாதிக்கப்படும்" எனக்கூறிய அவர்கள் தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்படுவது தொடர்பாக நாடே முடிவு செய்யட்டும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர் இப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் மற்றும் ரஞ்சன் கோகாய். இதில் நீதிபதி ரஞ்சன் கோகாய்தான் இப்போது இந்திய நீதித்துறையின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார்.
வழக்குகள் ஒதுக்கீடு
உச்ச நீதிமன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ ஒரு நீதிபதி ஒரு குறிப்பிட்ட வழக்கு தனக்கு ஒதுக்கப்பட வேண்டும் என எண்ணுவது இயற்கை ஆனால் அந்த வழக்கை தனக்குத்தான் ஒதுக்க வேண்டும் என அவர் தலைமை நீதிபதியை நிர்பந்திக்க நினைக்கும்போதுதான் பிரச்சனை எழுகிறது உதாரணமாக நீதிபதி கர்ணன் பிரச்னையை கூறலாம். அதுபோல தலைமை நீதிபதி ஒரு வழக்கின் தீர்ப்பின் திசையை தீர்மானிக்கும் பொருட்டு அந்த வழக்கை தனக்கு வேண்டிய நீதிபதிகளிடம் ஒப்படைப்பது என்பதுவும் நீதிமன்றங்களின் மீதான அடிப்படை நம்பிக்கையையே தகர்த்து விடும். இப்படித்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நடந்து கொள்கிறார் என்ற குற்றசாட்டு இப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட 4 நீதிபதிகளால் எழுப்பப்பட்டது. இதற்காக இவர்கள் 4 பேரும் செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்னர் தலைமை நீதிபதியை சந்தித்து கடிதம் கொடுத்தான் எவ்வித பலனும் இல்லை என்பதாலேயே மக்கள் மன்றத்தில் தங்கள் மனக் குமுறலை கொட்டியுள்ளனர்.
எண்ணிக்கை அதிகரிப்பு
நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வும், சட்டங்கள் குறித்த தெளிவும் இப்போது மக்களிடையே பெருமளவில் பரவலாக்கம் ஆகிவிட்ட நிலையில் இப்போதெல்லாம் பொதுநல வழக்குகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டன. இதனால் நீதிபதிகளுக்கும் அளவுக்கு அதிகமாக ஊடக வெளிச்சம் கிடைக்கிறது. இது கிடைக்காத நீதிபதிகள் ஒருவித விரக்தி நிலைக்கு செல்வதை தவிர்க்க முடிவதில்லை. இந்த இரண்டுமே நீதி பரிபாலனதுக்கும் ஜனநாயகத்துக்கும் மிகப் பெரும் கேட்டை விளைவிக்கும். தீபக் மிஸ்ரா சீனியர் நீதிபதிகளை கண்டுகொள்ளாமல் இளைய, மற்றும் தனக்கு விருப்பமான நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்குகிறார் என்று குற்றம்சாற்றி இப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட 4 நீதிபதிகள் போர்க்கொடி தூக்கினார்களோ அது போன்றதொரு நிலைமை மீண்டும் உச்ச நீதிமன்றத்திலோ உயர்நீதி மன்றத்திலோ வந்து விட கூடாது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும் கூட.
தீர்வு காண முயல்வாரா
நீதிமன்றத்தின் தற்போதைய நடைமுறைகளில் சிக்கலை ஏற்படுத்தும் சில நடைமுறைகள் தலைமை நீதிபதி எந்த வழக்கை எந்த முறையில் எந்த நீதிபதி அல்லது எந்த அமர்வுக்கு ஒதுக்குகிறார்? இதற்கு எந்தவிதமான மெக்கானிசம் கையாளப் படவேண்டும்? தலைமை நீதிபதி நியமனம் கூட எப்படி நியமிக்கப்படல் வேண்டும்? முது நிலை என்ற அடிப்படையிலா அல்லது வழக்கு நடத்திய அனுபவம், சட்ட நுணுக்க அறிவு போன்றவற்றின் அடிப்படையிலா அல்லது சாதிப் பிரிவு ஒதுக்கீட்டின் அடிப்படையிலா போன்ற கேள்விகளுக்கு இப்போது விடை காண வேண்டியது அவசர அவசியமும் கூட, தானே இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்திருப்பதால் புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இதற்கு முதலில் தீர்வு காண முயல்வாரா என்பதுதான் மக்களின் கேள்வி? செய்வாரா ரஞ்சன் கோகாய்.