அக்கா என் கைய வெட்றாங்க.. நள்ளிரவில் பதற வைத்த அழைப்பு.. கூடா நட்பால் இளைஞருக்கு சோகம்
ஒடிசா: நண்பர்களுடன் சுற்றுலா செல்வதாக கூறி கஞ்சா வாங்க ஒடிசா சென்ற திருவள்ளூர் இளைஞரை அந்த மாநில மர்ம கும்பல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்வதற்கு முன்பு அந்த கும்பல், அஜய் குடும்பத்தினருக்கு அழைத்து பணம் கேட்டு பேரம் பேசிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அஜய். ஆட்டோ ஓட்டுநரின் மகனான இவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜய் தன் நண்பர்களுடன் கொடைக்கானல் சுற்றுப்பயணம் செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

மூன்று நாட்களுக்கு பிறகு அஜய் தன் அம்மாவுக்கு அழைத்து, என்னிடம் காசு இல்லை. ரூ.1,500 அனுப்பினால் பேருந்தில் வீடு திரும்பிவிடுவேன் என கூறியுள்ளார். அவர்களும் பணம் அனுப்பியுள்ளனர். ஆனால் அன்றைய தினம் இரவு அஜய் தன் அக்காவுக்கு அழைத்து, தன்னை சில வட இந்தியர்கள் பிடித்து வைத்து மிரட்டி வெட்டுவதாக அலறி துடித்துள்ளார்.
இதுகுறித்து அஜயின் அக்கா செய்தியாளர்களிடம் கூறுகையில், "ட் நைட் ஒன்றரை மணிக்கு போன் வந்தது. அக்கா.. இந்திக்காரங்க பிடிச்சு வைச்சு என் கையை வெட்டறானுங்க. காசு கேட்டு மிரட்டறானுங்க. அவங்க கேட்கற காசை கொடுத்துருங்க. இல்லாட்டி என்னை சாகடிச்சுருவாங்க. கத்தி வைச்சு குத்தறாங்க. எனக்கு பயமா இருக்கு அக்கா. நீதான் என்னை காப்பாத்தனும் என துடிச்சான்.
அஜய் ஆபத்தில் இருப்பதால் நாங்களும் காசு கொடுக்க தயாரானோம். போலீஸ் பணம் அனுப்ப வேண்டாம் என கூறிவிட்டனர்." என்றும் அவரின் சகோதரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அஜயின் குடும்பத்தினர் புல்லரம்பாக்கம் காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். காவல்துறையும் அஜயின் எண்ணுக்கு அழைத்து, பணம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.
சிறிது நேரத்திலேயே அஜய்யின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது. அடுத்து என்ன செய்வதென்று அறியாமல் தவித்த நிலையில், அதிர்ச்சி தகவல் வெளியானது. காவல்துறை விசாரணையில் அஜய்க்கு கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்துக்கு அடிமையாகியது தெரியவந்தது. செங்குன்றம் பகுதியில் உள்ள கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி சரித்திர பதிவேடு குற்றவாளியான அபினேஷ் என்பவருடன் பழக்கமாகியுள்ளார்.
கஞ்சா வாங்குவதற்காக அபினேஷ் உடன் அஜய் ஒடிசாவுக்கு ரயிலில் சென்றுள்ளார். ஆனால் வீட்டில் கொடைக்கானல் செல்வதாக பொய் சொல்லியுள்ளார். ஒடிசாவில் ஒரு கும்பலிடம் 3 கிலோ கஞ்சாவை வாங்கிக் கொண்டு, அபினேஷ், அஜய் இருவரும் ரயில் தண்டவாளத்தில் நடந்து வந்துள்ளனர். அப்போது அங்கு திடீரென வந்த 5 பேர் கொண்ட கும்பல் இருவரையும் துரத்தியுள்ளனர்.
அபினேஷ் தப்பி செல்ல, அஜய் அந்த கும்பலிடம் சிக்கிவிட்டார். பிறகு அஜய் குடும்பத்தினருக்கு அழைத்து ரூ.5 லட்சம் பண வேண்டும் என கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் ரூ.20,000 கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளனர். காவல்துறை பணம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி அஜயை தேடி ஒடிசா சென்றுள்ளனர். அங்கு அவரை ஏற்கனவே கொலை செய்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து திருவள்ளூர் காவல்துறையினர் ஒடிசாவில் உள்ள அஜயின் உடலை, தமிழ்நாடு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒடிசா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அஜய் குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications