ஹரித்துவாரில் மீண்டும் நிறுவப்பட்டது திருவள்ளுவர் சிலை - தருண் விஜய் தகவல்
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்பட்டதாக பாஜக எம்.பி. தருண் விஜய் தகவல் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். கடந்த 29-ந் தேதி ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட விழாவில் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
On Guru Purnima- Thiruvalluvar grace prevailed
— Tarun Vijay (@Tarunvijay) July 19, 2016
State govt correctd mistake
Statue re erectd,garlanded
Nandri to all pic.twitter.com/pbTDlIPlfP
ஆனால், சாதுக்களின் கடும் எதிர்ப்பால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. ஆனால், தற்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடக்கிறது. மேலும் திருவள்ளுவரை தலித் என்று கூறிய சர்ச்சையும் எழுந்தது.
இதையடுத்து ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலைக்கு நேர்ந்த அவலம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஹிரித்துவாரில் திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்பட்டதாக தருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ்ராவத்துக்கு கடிதம் எழுதியதை அடுத்து மீண்டும் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும், ஜனநாயக முறையில் குரல் கொடுத்த தமிழக மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.