மத்திய கிழக்கு, ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளாக விற்கப்படும் இந்திய பெண்கள்!
டெல்லி: இந்தியா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மத்திய கிழக்கு நாடுள் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளாக விற்கப்படுவது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரி தனது வீட்டில் வேலை செய்த நேபாளத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. முன்னதாக நேபாளத்தைச் சேர்ந்த 24 வயது ரீமா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது பெற்றோரால் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த தரகரிடம் விற்கப்பட்டார்.
அவரும், அவருடன் 5 பெண்களும் துபாய்க்கு விமானத்தில் ஏறும் முன்பு டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் போலீசாரால் கடந்த ஜுலை மாதம் 27ம் தேதி மீட்கப்பட்டனர்.
செக்ஸ் அடிமைகள்
இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்டுதோறும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்யப்படுகின்றனர். மேலும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமும் அவர்கள் விற்கப்படுகிறார்கள்.
கடத்தல்
பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு செக்ஸ் அடிமைகளாக அனுப்பி வைக்க விமான நிலையம் மற்றும் குடியேற்றத் துறையைச் சேர்ந்தவர்கள் உதவி செய்வதாக கூறப்படுகிறது.
வறுமை
வறுமையில் வாடும் பெண்களிடம் வெளிநாட்டில் நல்ல வேலை வாங்கித் தருவதாக அவர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைத்துச் சென்று அவர்களை செக்ஸ் அடிமை சந்தையில் விற்பனை செய்து விடுகிறார்கள் தரகர்கள்.
இலங்கை
டெல்லியில் இருந்து பல பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்படுவது குறித்து விமான நிலையங்களில் இருக்கும் குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர். இதனால் பெண்களை இலங்கை, தாய்லாந்து, மொராக்கோ, பாங்காக் அழைத்துச் சென்று அங்கிருந்து அமீரகம், குவைத், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் சிரியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ஆப்பிரிக்கா
இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் இருந்து கடத்தி செல்லப்படும் பெண்களை ஆப்பிரிக்க நாடுகளான தான்சானியா மற்றும் கென்யாவைச் சேர்ந்த நபர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்று செக்ஸ் அடிமைகளாக வைத்துக் கொள்கிறார்கள்.
டெல்லி
நேபாளம், வங்கதேசத்தை சேர்ந்த பெண்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். கடந்த 2 மாதங்களில் மட்டும் ஒரு பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் கமிஷன் பெற்றுக் கொண்டு 700க்கும் மேற்பட்ட பெண்களை மேற்காசிய நாடுகளுக்கு அனுப்பி வைத்ததாக தரகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி டெல்லியில் நேபாளத்தைச் சேர்ந்த 2 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தான் அந்த தகவலை அளித்தனர். மேலும் துபாய்க்கு அவர்கள் அனுப்பி வைக்கவிருந்த 21 பெண்கள் மீட்கப்பட்டனர்.