தெலுங்கானா- 3 கடலோர காங்.. எம்.எல்.ஏக்கள் ராஜினாமா.. ஆட்சிக்கு சிக்கல்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை எதிர்த்து கடலோர ஆந்திராவைச் சேர்ந்த 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆடலா பிரபாகர் ரெட்டி, ஸ்ரீதர் கிருஷ்ண ரெட்டி, சத்தியானந்த ராவ் ஆகியோரே ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏக்கள் ஆவர். இவர்கள் தெலுங்கானாவை கடுமையாக எதிர்த்து வருபவர்கள் ஆவர். மேலும் நாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதாவைக் கொண்டு வரவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனால் நாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்து தற்போது மூவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
இதேபோல மேலும் பல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலகுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்படவுள்ளது.
சமீபத்தில்தான் சீ்மாந்திரா பகுதியைச் சேர்ந்த 6 லோக்சபா எம்.பிக்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி இவர்கள் நோட்டீஸ் கொடுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.