ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் சுட்டுக்கொலை!
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டம் கர்பன் கிராமத்தில் இருந்து 4 போலீசாரை தீவிரவாதிகள் இன்று காலை கடத்தினர். அவர்கள் ஆன்லைனில் ராஜினாமா செய்வதாக அறிவிக்காவிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டும் வீடியோவை தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
இதைத்தொடர்ந்து மூன்று போலீசாரும் ஆன்லைனில் தங்கள் ராஜினாமாவை அறிவித்தனர். இதைத்தொடர்ந்து கடத்தப்பட்ட 3 போலீசாரையும் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
குண்டுகள் துளைத்த காயங்கள்
அவர்களின் உடம்பில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயங்கள் இருந்தன என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரகசிய தகவல்
முன்னதாக இன்று அதிகாலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை, பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர்.
ராணுவத்தினர் பதிலடி
இதையறிந்த தீவிரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு, ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.
பலத்த பாதுகாப்பு
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.