தலைநகரில் அதிர்ச்சி சம்பவம்.. டெல்லியில் பட்டினியால் 3 சிறுமிகள் மரணம்..!
டெல்லி: டெல்லி மந்தவாலி பகுதியில் ஒரே வீட்டில் மூன்று சிறுமிகள் பட்டினியால் உயிரிழந்த சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டெல்லி மந்தவாலி பகுதியில் 3 சிறுமிகள் அவர்களுடைய வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளனர். இந்த மூன்று சிறுமிகளும் சகோதரிகள் என்றும் அவர்கள் வீட்டில் ஒரு அறையில் மயங்கிக் கிடந்ததாகவும் அண்டை வீட்டுக்காரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த சிறுமிகளின் உடலில் சிறுகாயமோ கீறலோ எதுவும் இல்லை.

முதலில் சென்று பார்த்த அண்டை வீட்டுக்காரர்கள் சிறுமிகளையும் அவர்களுடைய அம்மாவையும் டெல்லி லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே மருத்துவர்கள் சிறுமிகள் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் சிறுமிகளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதப் பரிசோதனையில் சிறுமிகள் பட்டினியால் இறந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து டெல்லி கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் பங்கஜ் குமார் சிங் கூறுகையில், "அண்டைவீட்டுக்காரர்கள் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, சிறுமிகள் மயக்கமடைந்து கிடந்துள்ளனர். அங்கே சிறுமியின் தாயும் இருந்துள்ளார். ஆனால், அவருக்கு அதுபற்றி எதுவும் தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
போலீஸார் விசாரணையில், உயிரிழந்த சிறுமிகளின் தந்தை ஒரு தினக் கூலி தொழிலாளர். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. மன நலம் குன்றிய சிறுமிகளின் தாயால் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்று போலீஸார் கூறுகின்றனர்.
இருப்பினும், சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை. அதனால், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திக்கொண்டு இருக்கின்றனர் என்றும் டெல்லி போலீஸார் தெரிவிக்கின்றனர்.
ஆனால், டெல்லி லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் அமிதா சக்சேனா கூறுகையில், முதல் கட்ட பிரேதப் பரிசோதனையில் சிறுமிகள் பட்டினியால் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் வேறு வேறு மருத்துவமனைகளில் இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சினர் வலியுறுத்தி வருகின்றனர்.
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா இந்த சம்பவத்தில் மிகப்பெரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டெல்லி மாநில எதிர்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் சிறுமிகள் பட்டினியால் உயிரிழந்த சம்பவத்தில் ஆம் ஆத்மி கட்சியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது குறித்து டெல்லி காங்கிரஸ் கட்சி தலைவர் அஜய் மக்கான் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, டெல்லி மந்தவாலி பகுதியில் சிறுமிகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். ஆட்சியாளர்கள் விரும்பும் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெறுவதற்கு சிறுமிகளின் பிரேதப் பரிசோதனை லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையிலிருந்து ஜிபிடி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு ரேஷன் அட்டை இல்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது, டெல்லியில் 33.5 லட்சம் ரேஷன் அட்டைகள் இருந்தன. ஆனால், இப்போது 15 லட்சம் ரேஷன் அட்டைகள்தான் இருக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியை விமர்சித்துள்ளார்.
டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், "டெல்லியில் இதுபோன்ற வருத்தம் தரக்கூடிய சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இங்கே அரசாங்கம் ரேஷன் அட்டைகளை விநியோகத்தில் வெற்றி பெற்றுள்ளதாக சொல்கிறது." என்று விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications