ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற மும்பை இளைஞர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
மும்பை: மும்பையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்திருக்க கூடும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களை பிடிக்க மத்திய புலனாய்வு துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் அச்சுருத்தலாக செயல்பட்டு வருகிறது ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பு. ஈரான், சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். அமைப்பை முழுவதுமாக அழிக்க அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படைகள் தீவிரமாக தாக்குதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் ராஜஸ்தானில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளராக இருந்த சிராஜூதீன் என்ற கர்நாடாகாவைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்க்கும் வேலையை சிராஜூதீன் செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில்,மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான மால்வானியைச் சேர்ந்த ஆயாஸ் சுல்தானை (23) கடந்த அக்டோபர் 30-ம் தேதி முதல் காணவில்லை. அதே பகுதியைச் சேர்ந்த மொஹ்சின் ஷேக் (26), வாஜித் ஷேக் (25) ஆகிய இருவரும் கடந்த 16-ம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டனர். வெவ்வேறு காரணங்களை கூறி வெளியே சென்றவர்கள் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் ஒரே பகுதியைச் சேர்ந்த இந்த மூன்று பேரும் ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் நோக்கத்துடன் வீட்டைவிட்டு சென்று இருக்க கூடும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்களின் கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்த மும்பை போலீசார் அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்களை பிடிக்க மத்திய புலனாய்வு துறையின் உதவியையும் நாடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications