காஷ்மீரில் மீண்டும் பரபரப்பு! ஜீப்பில் சென்று கொண்டிருந்த 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! என்ன நடந்தது?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. அங்கு அவ்வப்போது இந்தியா பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடந்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் காஷ்மீரில் எதிர்பார்க்காத வகையில் நடந்த விபத்தில் மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த மாதம் காஷ்மீர் பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து அங்குப் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதிலடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடந்து வருகிறது.

3 வீரர்கள் உயிரிழப்பு
அதேபோல இந்தியா எல்லையில் தனது ராணுவ வீரர்களை ஹை அலர்ட் மோடில் வைத்துள்ளது. மேலும், தேவையான இடங்களுக்கு விரைந்து ராணுவ வீரர்களையும் இந்தியா அனுப்பி வருகிறது. இதற்கிடையே காஷ்மீரில் இன்று எதிர்பார்க்காத வகையில் நடந்த விபத்தில் மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
என்ன நடந்தது
அதாவது இன்று ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்குத் தேசிய நெடுஞ்சாலை 44 வழியாக ராணுவத்தினர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ராணுவ வீரர்கள் சென்ற ஒரு ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிகிறது. அது அருகே உள்ள 700 அடி ஆழமுள்ள பள்ளாத்தாக்கில் பாய்ந்துவிட்டது. இன்று காலை 11.30 மணியளவில் பேட்டரி சாஷ்மா அருகே இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராணுவம், போலீசார், துணை ராணுவப் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து உடனடியாக மீட்புப் பணியைத் தொடங்கினர். கொஞ்ச நேரத்திலேயே பள்ளத்தாக்கில் ஜீப்பை மீட்புப் படையினர் கண்டறிந்தனர். இருப்பினும், வாகனத்தில் பயணித்த மூன்று வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
உயிரிழப்பு
இந்த விபத்தில் இறந்தவர்கள் சிப்பாய்கள் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மான் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்கள் பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய ராணுவ வாகனம் முழுமையாகச் சீர்குலைந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தூதரக நடவடிக்கைகளையும் இந்தியா குறைத்துள்ளது. இது மட்டுமின்றி முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் பொருளாதாரமே ஆட்டம் காணும் சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications