மது போதைக்கு அடிமையாகும் இந்தியா இளைஞர்கள் 3 மடங்காக உயர்வு
கோவா: இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது என சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இன்றைய இளையதலைமுறையினரிடையே அதிகரித்து வரும் பார்ட்டி கலாச்சாரம்தான் மதுப் பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை கழகத்தின் பொது சுகாதார பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த அரவிந்த் என்பவரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
2 ஆயிரம் இளைஞர்கள்
இந்த ஆய்விற்காக வடக்கு கோவாவை சேர்ந்த 20-49 வயது உடைய 2 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள் அடங்குவர்.
மனநலபாதிப்பு
மதுபானத்தை எந்த வயதில் குடிக்க ஆரம்பித்தீர்கள்?, எவ்வளவு மதுபானம் எடுத்து கொண்டீர்கள்? மற்றும் குடிப்பதால் காயம் எதுவும் ஏற்பட்டதா? என்பன போன்ற கேள்விகள் அவர்களிடம், கேட்கப்பட்டன. அவர்களின் மனநல பாதிப்பு குறித்தும் தகுதி வாய்ந்த நபரால் ஆய்வின்போது கணிக்கப்பட்டன.
இளைஞர்களிடம் அதிகம்
இளம் வயதில் குடிக்க தொடங்காதவர்களை காட்டிலும், மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டு மற்றும் மதுபானத்திற்கு அடிமையாவது என்பது இளைஞர்களிடையே இரு மடங்காக உள்ளது. அவர்கள் குடிப்பதன் காரணமாக 3 மடங்கு காயம் அடைந்து உள்ளனர்.
மதுவின் மயக்கத்தில்
கடந்த 20 ஆண்டுகளில் மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. மது குடிப்பதால் வாலிபர்களின் உடல் நலத்துக்கு மிகுந்த கேடு ஏற்படுகிறது.
மது அடிமைகள்
கடந்த 1956-1960ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 19.5 சதவீதமாக இருந்தனர். இந்த விகிதாச்சாரம் 1981-85ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் பிறந்த இளைஞர்களிடையே 74.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 3 மடங்கு அதிகமாகும்.
இளம் வயதில் மது
நகர்ப்புறங்கள் மற்றும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருபவர்கள் மிக இளம் வயதிலேயே இந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதிக வருவாய் கொண்ட நாடுகள்
இந்த ஆய்வு முடிவின்படி, இளம் வயதில் மதுபானம் குடிக்க தொடங்குவதால் வாழ்நாள் முழுவதும் அதனை சார்ந்து இருக்கும் சூழல் அதிகமாக உருவாகிறது. குடிப்பதால் ஏற்படும் துன்பம், மதுபானம் தொடர்பால் ஏற்படும் காயங்கள் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் வயதான காலத்தில் அதிகரிக்கின்றன என்பதும் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மது நுகர்வு கலாச்சாரம்
மதுபான நுகர்வு மற்றும் அதனால் ஏற்படும் தீங்கு தரும் விளைவுகள் ஆகியவை இந்தியாவில் மிக பெரும் பொது சுகாதார பிரச்சனையாக விளங்குவதுடன் இந்த கலாசாரம் ஆபத்தை உணர்த்துவதாகவும் உள்ளது என ஆய்வின் தலைவர் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு அவசியம்
இந்த ஆய்வு முடிவுகள், இளம் வயதில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதன் அவசியத்தை மேற்கோள் காட்டுகிறது. மேலும், இளம் வயதில் மதுபானம் குடிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கவும் வலியுறுத்துகிறது.