சட்டப்படிப்பு தேர்வில் “பிட்” அடித்த ஐ.ஜிக்கு கட்டாய லீவு!
திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டப் படிப்பு தேர்வில் பிட் அடித்த ஐஜிக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மகாத்மாகாந்தி பல்கலைக் கழகம் சார்பில் முதுகலை சட்டப்படிப்புக்கான தேர்வுகள் நடந்து வருகிறது. கொச்சி கலமச்சேரியில் உள்ள செயின்ட்பால் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் நேற்று தேர்வு எழுதினர்.
தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த ஒருவர் துண்டு சீட்டை பார்த்து பிட் அடிப்பதைக் கண்டார்.

உடனே அந்த மாணவரை கையும், களவுமாக பிடித்து தேர்வுக்கூட சூப்பிரண்டிடம் ஒப்படைத்தார். அவர் காப்பி அடித்து பிடிபட்ட நபரை தேர்வு அறையில் இருந்து வெளியேற்றினார்.
அப்போதுதான் பிடிபட்ட நபர் திருச்சூர் சரக போலீஸ் ஐ.ஜியான டி.ஜே. ஜோஸ் என தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த தேர்வு கூட கண்காணிப்பாளர்கள் இந்த தகவலை கல்லூரியின் துணை முதல்வர் பீட்டர் மற்றும் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.
இதற்கிடையே தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் பலரும் இந்த தகவலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் இதுபற்றி கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
ஐ.ஜி ஜோஸ் தேர்வு எழுதிய கல்லூரி துணை முதல்வர் பீட்டர் அவர் தேர்வுக்கூடத்தில் பிட் அடித்து பிடிபட்டதை உறுதி செய்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும் போது, "இந்த தகவலை மகாத்மாகாந்தி பல்கலைக் கழகத்திற்கு தெரிவித்து விட்டோம். இனி அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications