கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி விழாவில் பயங்கர மோதல்.... வி.ஹெச்.பி. நிர்வாகி உயிரிழப்பால் பதற்றம்!
பெங்களூரு: கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் வி.ஹெச்.பி. நிர்வாகி ஒருவர் உயிரிழந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது..
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விடுதலைப் போராட்ட வீரராக திப்பு சுல்தான் திகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ள கர்நாடக அரசு அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.

ஆனால் திப்பு சுல்தான் ஹிந்து விரோதி என கூறி இந்த விழாவுக்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதற்கு திப்பு சுல்தான் ஆதரவு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இருதரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது. அப்போது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 25 அடி உயர சுவர் ஒன்றில் இருந்து குடகு மாவட்ட நிர்வாகி புட்டப்பா படுகாயமடைந்தார்.
அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கல்வீச்சு சம்பவத்தால் குட்டப்பா உயிரிழந்ததாகவும் போலீசார் தடியடி நடத்தியதால் அவர் பலியானார் என்றும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து குடகு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து கர்நாடகா அரசு அறிக்கை கேட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மோதல்கள் ஏற்படாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications