திருப்பதியில் வனத்தில் நடந்தது என்ன? - சாட்சிகளிடம் ஆந்திர ஐ.ஜி. ரகசிய விசாரணை
திருவண்ணாமலை: செம்மரக்கட்டைகள் கடத்தியதாக ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சிகளிடம் ஆந்திர சிறப்பு புலனாய்வுக் குழு ஐ.ஜி. ரகசிய விசாரணை மேற்கொண்டார். சுடப்படுவதற்கு முன்னர் வனப்பகுதியில் நடந்தது என்ன என்பது பற்றி ஐ.ஜியிடம் சாட்சிகள் மூவரும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 7ம் தேதி திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாகக் கூறி, தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர சிறப்பு போலீஸார், சுட்டுக் கொன்றனர். பேருந்தில் பயணம் செய்த கூலித் தொழிலாளர்களை பிடித்துச் சென்று ஆந்திர சிறப்பு போலீஸார் சுட்டுக்கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதனையடுத்து 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஜி. ரவிசங்கர் அய்யனார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை ஆந்திர அரசு அமைத்தது.

நேரில் பார்த்த சாட்சிகள்
இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள புதூரை சேர்ந்த சேகர் (55), மேல்கணவாய்னூரை சேர்ந்த இளங்கோ (22), தருமபுரி மாவட்டம் சித்தேரியைச் சேர்ந்த வரும், துப்பாக்கிச் சூட்டில் பலியான ஹரிகிருஷ்ணனின் மகனுமான பாலச்சந்தர் (29) ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன் ஆஜராகி, ஆந்திர போலீஸார் தமிழர்களை பேருந்தில் இருந்து பிடித்துச் சென்றதை நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்தனர். அதன்பின் மூவரும் மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் பாதுகாப்பில் தங்கவைக் கப்பட்டுள்ளனர்.
மதுரையில் விசாரணை
மூன்று சாட்சிகளிடமும் விசாரணை நடத்துவதற்காக ஆந்திர சிறப்பு புலனாய்வுக் குழுவினர் செவ்வாய்கிழமையன்று மதுரை வந்தனர். சாட்சிகளை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜர் படுத்திய மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேனிடம் முதல் நாளில் விசாரணை நடத்தினர்.

ரகசிய விசாரணை
2ம் நாள் விசாரணை, சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவரான ஐ.ஜி. ரவிசங்கர் அய்யனார் தலைமையில் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. அவரிடம், சுட்டுக் கொலை செய்யப்படுவதற்கு முன் தமிழக கூலித்தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் பேருந்தில் இருந்து பிடித்துச் சென்ற விவரங்களை இளங்கோ, சேகர், பாலச்சந்தர் ஆகியோர் விளக்கிக் கூறினர். அதில் ஏற்பட்ட சந்தேகங்கள் குறித்து மூவரிடமும் ஐ.ஜி. தனித்தனியாக ரகசிய விசாரணை மேற்கொண்டார்.

விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி. ரவிசங்கர் அய்யனார், ‘‘தமிழக தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்ற ஆந்திர போலீஸார் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்குபதியப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்றார்.
தடய அறிவியல் அறிக்கை
இங்குள்ள முக்கிய சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரிப்போம். தடய அறிவியல் அறிக்கை, துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுக்கான பகுப்பாய்வு அறிக்கை உள்ளிட்ட ஆய்வு அறிக்கைகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. அதேபோல் சாட்சியங்கள் அளிக்கும் தகவல்களை முழுமையாக விசாரித்து உறுதி செய்ய வேண்டி இருப்பதால் இன்னும் சில காலம் தேவைப்படும்'' என்றார்.

பாதுகாப்பு தேவை
தற்போது எங்கள் பாதுகாப்பில் உள்ள 3 முக்கிய சாட்சிகளுக்கும் தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் வலியுறுத்தியுள்ளார்.
செல்போன் நம்பர்கள்
சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திருப்தியாக உள்ளது, கொல்லப்பட்ட 20 தமிழர்களின் செல்போன் எண்களை அவர்களிடம் அளித்துள்ளோம் என்று கூறிய ஹென்றி, சம்பவ நாட்களில் இவை எந்தெந்த பகுதியில் இருந்தன, அழைப்புகளின் நேர விவரம் போன்றவற்றை வைத்து விசாரிக்குமாறு கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications