சூரிய கிரகணம்: வருகிற 9-ம் தேதி திருப்பதி கோயிலில் தரிசனம் ரத்து
திருப்பதி: சூரிய கிரகணத்தை முன்னிட்டு வருகிற 9 -ம் தேதி திருமலை ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் வரும் நிலவின் நிழல் சூரியனின் மேல் விழுவதை சூரிய கிரகணம் என்கிறார்கள். வரும் 9-ம் தேதி நடக்கும் சூரிய கிரகணத்தை இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்தவர்களும் கண்டு களிக்கலாம். சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் மூடப்படுவது வழக்கம்.

அதன்படி வருகிற 9-ம் தேதி அதிகாலை 5.47 மணியில் இருந்து காலை 9.08 மணிவரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ம் தேதி இரவு 8.30 மணியில் இருந்து 9-ம் தேதி காலை 10 மணிவரை 12 மணிநேரம் நடை சாத்தப்பட்டு, தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.
அதைத்தொடர்ந்து சூரிய கிரகணம் முடிந்த பின்னர் காலை 10 மணிக்கு மேல் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பின்னர் சம்ரோஷ்ணம், புண்ணியாவதனம், வைதீக காரிய கர்மங்கள் செய்யப்படுகிறது.
அதனையடுத்து கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சூரிய கிரகணம் நிகழ்வதால், 9-ம் தேதி காலை மற்றும் மாலை வேளைகளில் நடக்கும் சகஸ்ர கலசாபிஷேகம் உள்பட சில ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications