20 தமிழர்களைக் கொன்றது ஏன், விசாரணை நடத்தாதது ஏன்... மனித உரிமை ஆணையம் சரமாரி கேள்வி!
திருப்பதி: ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப் பகுதியில் 20 தமிழர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை நீதி விசாரணை நடத்தாதது ஏன் என்று தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று ஆந்திர போலீஸாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த 7ஆம் தேதி திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை செம்மரம் கடத்தியதாக ஆந்திர அதிரடி சிறப்புப் படை போலீஸார் சுட்டுக் கொன்றனர். நாடுமுழுவதும் அதிர்ச்சியலைகளை உருவாக்கிய இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் விசாரணை நடத்த நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் மூவர் அடங்கிய தேசிய மனித உரிமை ஆணைய குழு, புதன்கிழமை ஹைதராபாத் வந்தது. ஹைதராபாத்தில் நேற்று தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை மேற்கொண்டது.
ஹைதராபாத்தில் விசாரணையைத் தொடங்கிய தேசிய மனித உரிமை ஆணைய அமர்வு ஆந்திர காவல்துறை ஏடிஜிபி வினய்ரஞ்சன் ரேவிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். விசாரணையைத் துவங்கிய 3 பேர் கொண்ட அமர்வு, 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை ஆந்திர காவல்துறை கையாண்ட விதம் திருப்திகரமாக இல்லை என்றனர்.
இந்த சம்பவம் குறித்து வருவாய் துறையை விசாரிக்க ஏன் அமர்த்தினீர்கள் என்றும் ஆந்திர ஏடிஜிபி வினய்ரஞ்சன் ரேவிடம் அமர்வு கேள்விகளை கேட்டு திணறடித்தது. மேலும், வழக்குப் பதிவு செய்ய கால தாமதம் ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீதிவிசாரணை இல்லையே
முன்னதாக, திருப்பதி என்கவுன்ட்டர் குறித்த அறிக்கையை ஆந்திர போலீஸார் தேசிய மனித உரிமை ஆணைய குழுவிடம் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையை படித்த நீதிபதி பாலகிருஷ்ணன், நாட்டில் முன்பு எப்போதும் நடக்காத வகையில் அதிகமானவர்களை சுட்டுக் கொன்று என்கவுன்ட்டர் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், ஏன் இதுவரை நீதி விசாரணை செய்யப்படவில்லை.
எத்தனை போலீசார்
இந்த என்கவுன்ட்டரில் போலீஸார் எத்தனை பேர் ஈடுபட்டனர். அவர்களின் விவரம், அவர்களுக்கு வழங்கிய மருத்துவ சிகிச்சைகள் போன்ற அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.
நேரடி ஆய்வு
என்கவுன்ட்டரின்போது பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கியில் பதிவான போலீஸாரின் பேச்சுகள், அவர்களின் செல்போன் எண்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட இடத்தை விரைவில் நேரில் ஆய்வு செய்ய இருக்கிறோம் எனவும் நீதிபதி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்களும் ஆந்திர போலீஸாரிடம் துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி சரமாரியாக கேள்விகள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது,












Click it and Unblock the Notifications