ஒசூரில் நடந்த ரவுடி 'கவாலா' கொலைக்கு பெங்களூரில் பழி தீர்த்த கூட்டாளிகள்: பட்டப்பகலில் பயங்கரம்
பெங்களூர்: ஓசூரில் நடந்த பிரபல ரவுடி கவாலா கொலைக்கு பழிக்கு பழியாக, பெங்களூரில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கூட்டாளிகள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். சமாதானமாக பேசும் போது இந்த பயங்கர சம்பவம் நடந்ததுஇந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ஓசூர், அரசனபட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் என்ற கவாலா (40). இவர், ரியல் எஸ்டேட் அதிபராகவும், கட்டிட காண்டிராக்டராகவும் இருந்தார். கவாலா மீது அண்டை நகரமான பெங்களூரில், 5 கொலை உள்பட 32 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதனால் பெங்களூர் போலீஸ் நிலையத்தின் ரவுடி பட்டியலில் கவாலா பெயர் இடம் பெற்றது.
கவாலாவுக்கும், பெங்களூரை சேர்ந்த ரவுடிக்கு குட்டிக்கும் மோதல் இருந்து வந்தது. இதையடுத்து, சித்ரதுர்கா கோர்ட்டில் நடந்த வழக்கு ஒன்றில் ஆஜராவதற்கு சென்ற குட்டியை கவாலா, அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர்.
இதற்கு பழிக்கு பழி வாங்க, ரவுடி குட்டியின் கூட்டாளிகள் திட்டமிட்டனர். கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி நள்ளிரவு பெங்களூரில் நடந்த ‘ஒன்வே‘ படத்தின் கேசட் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு ஓசூருக்கு காரில் திரும்பும் போது பாபு உள்ளிட்ட 9 பேரால், கவாலா படுகொலை செய்யப்பட்டார்.சிப்காட் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்த கவாலாவின் காரை வழிமறித்த பாபுவின் கூட்டாளிகள், கவாலாவின் கண்ணில் மிளகாய் பொடி தூவி வெட்டிக் கொலை செய்தார்கள்.
கொலையாளி பாபு பெங்களூர் மடிவாளா பகுதியில் வசித்து வந்தவர். இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரும் பெங்களூர் போலீஸின் ரவுடி பட்டியலில் உள்ளவர்தான். கவாலா கொலை தொடர்பாக, பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் 9 பேரை பெங்களூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். விசாரணைக்கு பின்பு 9 பேரும் ஓசூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் பாபு உள்பட அனைவரும் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இருப்பினும், பாபு ஓசூரிலேயே தங்கி இருந்தார். மேலும் அவர் கடந்த சில நாட்களாக தனது வீடு இருக்கும் பெங்களூர் மடிவாளாவுக்கும் வந்து சென்றார். இதுபற்றி ரவுடி கவாலாவின் வலதுகரமாக செயல்பட்டு வந்த ரவுடி நஞ்சுண்டாவுக்கு தெரிந்தது. இதையடுத்து, கவாலா கொலைக்கு பழிக்கு பழி வாங்க ரவுடி பாபுவை கொலை செய்ய நஞ்சுண்டா திட்டமிட்டார். ஓசூரில் இருந்து மடிவாளாவுக்கு வரும்போது பாபுவை தீர்த்து கட்டவும் நஞ்சுண்டா, அவரது கூட்டாளிகள் முடிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதுபற்றி பி.டி.எம். லே-அவுட் அருகேயுள்ள ஜெய்பீமாநகரில் வசிக்கும் ரியல்எஸ்டேட் அதிபரும், பாபுவின் நண்பருமான ராஜ்குமாருக்கு தெரிந்தது. நஞ்சுண்டாவின் திட்டம் குறித்து பாபுவிடம் தெரிவித்தார். மேலும் பாபு-நஞ்சுண்டாவை அழைத்து சமாதானமாக பேசுவதற்கும் ராஜ்குமார் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
அதன்படி, நேற்று மதியம் ஜெய்பீமாநகரில் வசிக்கும் ராஜ்குமார் வீட்டின் முதல் மாடியில் பாபு, நஞ்சுண்டா சமாதானமாக பேசுவதற்கு வந்தனர். பாபுவுடன், அவரது கூட்டாளிகள் விஷ்வா, ஈராலால், லட்சுமண் ஆகியோர் வந்திருந்தனர். அதுபோல, நஞ்சுண்டாவுடன், 10க்கும் மேற்பட்டோர் வந்திருந்தார்கள். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, இரு ரவுடி கோஷ்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.
இந்த நிலையில், திடீரென்று ஆத்திரமடைந்த நஞ்சுண்டா மற்றும் அவரது கூட்டாளிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், வாளால் பாபு, விஷ்வா, ஈராலால், லட்சுமணை சரமாரியாக தாக்கினார்கள். தங்களது உயிரை காப்பாற்றி கொள்ள பதிலுக்கு பாபு கோஷ்டியும் தங்களிடம் இருந்த ஆயுதங்களால் தாக்க தொடங்கினார்கள்.
இந்த சம்பவத்தில் ரவுடி பாபுவுக்கு கழுத்து, தலை, கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிருக்கு போராடினார். அதுபோல, விஷ்வா, ஈராலால், லட்சுமணும் படுகாயம் அடைந்தார். உடனே நஞ்சுண்டா, அவரது கூட்டாளிகள் அங்கிருந்து காரில் ஏறி தப்பி சென்று விட்டார்கள். இந்த நிலையில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த பாபு பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மடிவாளா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய விஷ்வா உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் விஷ்வாவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்
மடிவாளா போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நஞ்சுண்டா, அவரது கூட்டாளிகளை தேடிவருகிறார்கள். பழிக்கு பழி வாங்குவதற்காக தொடரும் கொலைகள் பெங்களூரில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.