அரை மொட்டை, அரை மீசை, அரை தாடியுடன்… 22வது நாளாக தொடரும் தமிழக விவசாயிகளின் போராட்டம்
அரை மொட்டை, அரை மீசை மற்றும் அரை தாடியுடன் என தமிழக விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் 22வது நாளில் நடைபெற்று வருகிறது.
டெல்லி: தேசிய வங்கிகளில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 22 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன.
அரை மொட்டை
ஆட்சியாளர்களை கவரும் வகையில் நூதனப் போராட்டங்களை ஒவ்வொரு நாளும் நடத்தி வரும் விவசாயிகள் தலை முடியை பாதியாக வழித்து ‘அடை மொட்டை' போராட்டத்தை போராட்டத்தின் 20வது நாளில் விவசாயிகள் நடத்தினார்கள். டெல்லியின் சுட்டெரிக்கும் வெயிலில் பாதி மொட்டை அடித்துக் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தை நடத்தியது கொடுமையாக இருந்தது.
பாதி மீசை
என்ன செய்தும், மத்திய அரசு தங்களை கண்டு கொள்ளாததால் நேற்று விவசாயிகள் அரை மீசையை வழித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய, மாநில அரசுகள் தங்களை சந்திக்க வேண்டும் என்று அப்போது விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இன்றும் வினோதம்
இந்நிலையில், அரை மொட்டை, அரை மீசை, அரை தாடியை எடுத்து இன்று விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தின் போதே கூட்டுறவு கடன்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த அறிவிப்பு வந்துள்ளதால் மகிழ்ச்சியோடு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய வங்கிக் கடன்
கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய வங்கியில் உள்ள 7000 கோடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்தால்தான் டெல்லியில் இருந்து அகல்வோம் என்று உறுதியாக விவசாயிகள் கூறி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஆம் ஆத்மி ஆதரவு
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.என் வசீகரன் இன்று விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை பாஜக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.