குட்டிக்கரணம் ஒன்னுதான் பாக்கி.. அதையும் போட்டாச்சி.. மத்தியஅரசு வாய் திறக்க இன்னும் என்ன செய்யனும்?
தமிழக விவசாயிகள் 31வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி குட்டிக் கரணம் போட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி: தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 31வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று குட்டிக் கரணம் போட்டு போராடி வருகின்றனர்.
தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆதரவு
விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி வடமாநில அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
உடலில் எழுதி..
இந்நிலையில், 30வது நாளான நேற்று கோரிக்கைகளை விவசாயிகள் தங்களது உடலில் மையினால் எழுதி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். "விவசாயிகளை கொல்லாதே! பயிர் கடன்களை ரத்து செய்து! விவசாய பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்!" உள்ளிட்ட வாசகங்களை மையினால் உடலில் எழுதி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குட்டிக் கரணம்
போராட்டத்தின் 31வது நாளான இன்று குட்டிக் கரணம் போட்டு விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குட்டிக் கரணம் போடுவது ஒன்றுதான் பாக்கி அதனையும் செய்தாகிவிட்ட நிலையில் மத்திய அரசு இப்போதாவது தங்களை திரும்பி பார்க்குமா என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மிரட்டல்
மத்திய அரசு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யும் வரையில் டெல்லியில் இருந்து போராடுவோம் என்று தெரிவித்துள்ள விவசாயிகள், தங்களை டெல்லியில் இருந்து விரட்டுவதற்கு பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். என்ன செய்தாலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் மன உறுதியுடன் போராடி வருகின்றனர்.