முல்லைப் பெரியாறு அணைக்கு "புலிகளால்" ஆபத்து இல்லை- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கூடுதல் மனு!
டெல்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் நேரடி ஆபத்து இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினரை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. அம்மனுவில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கங்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என தமிழக அரசு தெரிவித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷியே முகமது, நக்சலைட்டுகளால் அணை கட்டுமானங்களுக்கு ஆபத்து; தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் அவர்களால் ஆபத்து ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என மத்திய புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதைத்தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தோம். இது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் தொடர்பாக புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்ட அம்சங்களில் உடன்பாடு இல்லை என கூடுதல் மனுவைத் தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என கூறியிருந்தார்.
இதனடிப்படையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனுவைத் தாக்கல் செய்தது. அதில், தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு நேரடியாக பாதிப்பு எதுவும் இல்லை; விடுதலைப் புலிகள் குறித்த மத்திய புலனாய்வுத் துறையின் அறிக்கையில் தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.