காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு மீண்டும் வழக்கு
டெல்லி: காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி, ஆகஸ்ட் 19ம் தேதி 50.52 டிஎம்சி தண்ணீரை, தமிழகத்திற்கு, கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் அணைக்கட்டுகளில் போதிய நீர் இல்லை என்று காரணம் கூறிக்கொண்டு, கர்நாடகா இன்னும், தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடாமல் உள்ளது.
எனவே, தமிழகத்துக்கு உரிய பங்கு நீரைப் பெற்றிட உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு இன்னும் ஓரிரு தினங்களில் தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி இன்று தமிழகம் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசு நஷ்டஈடு தர கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 2013ல் வழக்கு தொடர்ந்தது. நஷ்டஈடாக கர்நாடக அரசு ரூ.2,480 கோடி தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை கடந்த 16ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இப்போது மீண்டும் தமிழகம் மனு தாக்கல் செய்துள்ளது கர்நாடகாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா சட்டசபையில் இந்த வழக்கு குறித்து கடந்த வாரம் மேலும் கூறுகையில், கர்நாடக மாநிலத்துடன் காவிரி நதிநீர் தொடர்பாக பல ஆண்டுகளாக தமிழகத்துக்கு பிரச்னை இருந்து வருகிறது.உச்ச நீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசு மேற்கொண்ட சட்டப் போரின் அடிப்படையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை 2013 பிப்ரவரி 19-ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிட்டது.
எனினும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு இன்னமும் அமைக்காத காரணத்தால் காவிரி நீரில் நமக்குரிய பங்கை கர்நாடக அரசு விடுவிப்பதில்லை. எனவே, இந்த அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசால் 2013-ஆம் ஆண்டே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை இன்னமும் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் நீண்ட கால நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. இவற்றில் காவிரி வழக்கும் ஒன்றாகும். உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வின் முன் காவிரி பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகள் கடந்த மார்ச் 28ம் தேதியன்று விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றம் இந்த வழக்குகளை ஜூலை 19ம் தேதி பட்டியலிடும்படி ஆணையிட்டது. பின்னர் இந்த வழக்கு அக்டோபர் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கர்நாடக அரசின் 4 பெரிய நீர்த்தேக்கங்களான ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகியவற்றின் மொத்த நீர்க் கொள்ளளவு 114.571 டிஎம்சி அடியாகும். இவற்றில் ஆகஸ்ட் 17ம் தேதி நிலவரப்படி 64.849 டிஎம்சி அடி நீர் இருப்பு உள்ளது.
கர்நாடக அரசு இந்த நான்கு அணைகளிலிருந்து அதன் பாசனத்துக்காக நீரை தொடர்ந்து விடுவித்து வருகிறது. மேட்டூர் அணையில் ஆகஸ்ட் 17ம் தேதி நிலவரப்படி 27.560 டிஎம்சி அடி நீர்தான் இருப்பு உள்ளது.
இவ்வாறு ஜெயலலிதா கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications