அவசரச் சட்டத்தில்.. காளைகளை காட்சிப்படுத்தும் தடையிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு?
மிருகவதை தடுப்புச் சட்டத்தில் காளைகளை காட்சிப்படுத்தும் தடையில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தரும் வகையில் புதிய அவசர சட்டம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி: மிருகவதை தடுப்புச் சட்டத்தில் காளைகளை காட்சிப்படுத்துதல் தடை தொடர்பான ஷரத்தில் தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது 1960-ம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டம்தான். இச்சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் உள்ள விலங்குகளை காட்சிப் படுத்துவதற்கான தடை அம்சங்களை மையமாக வைத்தே உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

போர்க்களமான தமிழகம்
இதனால் 2 ஆண்டுகாலமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறாமல் போனது. தற்போது தமிழகமே ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டுக்காக போர்க்குரல் கொடுத்து வருகிறது. தமிழினம் இதுவரை கண்டிராத யுக புரட்சியாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளுமே போர்க்களமாகிவிட்டன.

அவசர சட்டம்
இந்த நிலையில் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாநில திருத்தத்துக்கு அவசர சட்டம் கொண்டுவரப்படும் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த அவசர சடத்தின் அம்சங்கள் என்ன என்பது குறித்து அவர் விளக்கவில்லை.

தமிழகத்துக்கு விலக்கு?
இதனிடையே காளைகளை காட்சிப்படுத்துதல் தொடர்பான மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்டனை விதிப்பு
அதே நேரத்தில் காளைகளை துன்புறுத்துவது உறுதியானால் மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அந்த அவசர சட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications