7 தமிழர் விடுதலை: மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு!
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 தமிழரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த மாதம் 18ந் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
இதனையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இது குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம் மனுவை விசாரித்த நீதிபதிகள் 7 பேரை விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்தனர். இது தொடர்பாக பதில் அளிக்கக்கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தமிழக அரசு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம் மனுவில், ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுக்கு, மாநில அரசு தகவல் தெரிவித்தது. இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது.
ஆனால் மத்திய அரசு, முடிவு எடுக்காமல் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதனால் மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இம் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications