6ஆம் கட்டத் தேர்தல்: விவசாயிகள் நெருக்கடி; ஒலிம்பிக் வீரர்கள் சவுக்கடி! பாஜக பதற்றம்!
வரும் 25 ஆம் தேதி மக்களவைக்கான 6 ஆம் கட்டத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்குள்ளாகத்தான் டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற 8 மாநிலங்கள் வருகின்றன.
மொத்தம் 49 தொகுதிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. பாஜக எப்படியாவது டெல்லியைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சிறையில் அடைத்தது பாஜக அரசு என்று ஒரு கருத்து நிலவியது.

ஆனால், அந்தத் தடைகளை உடைத்து கெஜ்ரிவால் வெளியே வந்துவிட்டார். ஆகவே, போட்டி டெல்லியில் கடுமையாக இருக்கும். இதை பாஜக எப்படி எதிர்கொள்ளப் போகிறது. அதற்கு அவர்கள் தயாராக உள்ளார்களா?
மேலும் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பாஜக சந்திக்க உள்ள சவால்கள் என்ன? அதற்கான யுக்திகள் என்ன? ஆகியவற்றைப் பற்றிப் பேச முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரனைக் கேட்டோம்.
அவர் இது பற்றி மிக விரிவாகத் தனது கணிப்புகளை முன்வைத்தார். நம்மிடம் பேசிய பாலச்சந்திரன் பேசுகையில், "மோடி ராமர் கோயிலை முன்வைக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் அனுமரை முன்வைக்கிறார். இந்த விசயத்தில் இவர்கள் இருவருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வந்தவுடனேயே பாஜகவுக்குச் சரியான பதிலடியைக் கொடுத்தார். 'மோடிக்கு வயதாகி விட்டது. ஆகவே அமித்ஷாதான் அடுத்த பிரதமர்' என்று கொளுத்திப் போட்டார். அது அப்படியே பற்றி எரிந்தது.
அதுவரை பாஜகதான் பல சர்ச்சைகளைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அந்தக் கட்சி மீதே கெஜ்ரிவால் முன்வைத்த தாக்குதல் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இப்படி அரசியல் ரீதியாகப் பதிலடி தருவதில் கெஜ்ரிவால் சரியான ஆள்.
டெல்லியைப் பொறுத்தவரை அரவிந்த் கெஜ்ரிவால் மீது எந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அதை அந்த மாநில மக்கள் நம்ப மாட்டார்கள்.
ஏனென்றால் அந்தளவுக்கு அவர் நிறையத் திட்டங்களைச் செய்துள்ளார். டெல்லியில் திறமையான ஒரு நிர்வாகத்தை அவர் செய்துவருகிறார். அதுதான் உண்மை.
ஆகவேதான் பாஜக கெஜ்ரிவாலைக் கண்டால் பயப்படுகிறது. அவர் பீகாரில் போய் பேசினாலும் கூட்டம் கூடுகிறது. டெல்லியில் பேசினாலும் கூட்டம் கூடுகிறது. அந்தளவுக்கு வலிமையான தலைவராக அவர் மாறி இருக்கிறார்.

'இந்தியா' கூட்டணியைக் கலந்தாலோசிக்காமலே பல திட்டங்களை அவர் அறிவித்திருக்கிறார். அதை அவரே சொல்லியும் இருக்கிறார். 200 யூனிட் வரை மின் கட்டணம் வசூலிக்கப்படாது என்று கூறியுள்ளார்.
அவர் சொன்னால் செய்வார். அதை மக்கள் நம்புகிறார்கள். அதனால்தான் பாஜக அவரைக் கண்டு அஞ்சுகிறது. அரசியலில் நேர்மையான ஒரு அரசாட்சியைத் தரவேண்டும் என நினைப்பவர்கள் குறைவு.
அவரது ஆட்சியில் லட்சம் பெரிய அளவில் குறைந்துள்ளது. அதை அந்த மாநிலத்தில் உள்ள அடித்தட்டு மக்களே ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆகவே, அவருக்கு டெல்லியில் ஆதரவு இருக்கிறது. 2019 பாஜகவுக்குத்தான் டெல்லி மக்கள் அதிகம் வாக்களித்தனர். அப்போது எதிர்க்கட்சிகள் வலிமையாக இல்லை. ஆகவே, பாஜகவை ஆதரித்தார்கள்.
அந்த மாதிரியான நிலை இப்போது இல்லை. இந்தியா கூட்டணி வலிமையாக மாறி உள்ளது. அதை மக்களும் பார்க்கிறார்கள். அதனால், டெல்லியில் பாஜக சுலபமாக வெற்றி பெற முடியாது.

அடுத்து ஹரியானா. அங்கே விளையாட்டு வீரர்கள் பாலியல் புகார் முன்வைத்த போது பாஜக அரசு அவர்களை எப்படி நடத்தியது என்பது நாடே அறியும்.
இந்த நாட்டுக்காக ஒலிம்பிக் வரை போய் பதக்கம் வாங்கிக் கொடுத்தவர்களை இந்த அரசு எப்படி நடத்தியது? அவர்களின் குரலைக் காதுகொடுத்துக் கேட்கக் கூட இல்லையே. எனவே அங்கே பாஜக மீது அதிருப்தி உள்ளது. அதை இல்லை என மறுக்க முடியாது.
பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக வந்த போது காவல்படைகளை வைத்து மத்திய அரசு எப்படித் தாக்கியது? அவர்கள் சாலைகளில் பயணம் செய்யவிடாமல் எப்படி எல்லாம் தடுத்தது? துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைப் பஞ்சாப் மக்கள் மறந்து விடுவார்களா?
பஞ்சாபிலும் ஹரியானாவிலும் விவசாயிகள் போராட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் பாஜகவுக்குப் பல தடைகள் உள்ளன. இந்த 6 ஆம் கட்டத் தேர்தல் களம் பாஜகவுக்கு எளிதாக இல்லை என்றே கள நிலவரங்கள் காட்டுகின்றன" என்கிறார்












Click it and Unblock the Notifications