ரயில் விபத்து.. பம்பரமாய் சுற்றும் உதயநிதி! ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் சந்திப்பு
புவனேஷ்வர்: ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிக்காக ஒடிசாவுக்கு சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு இன்று அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து தமிழ்நாட்டு பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடினர்.
ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளையும், தேவையான நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த விபத்தில் காயமடைந்த மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் தேவையான உதவிகளை செய்திடவும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழு நேற்று ஒடிசா சென்றது.

விபத்து நடந்த பாலசோருக்கு அரசு ஹெலிகாப்டர் மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்றனர். அமைச்சர்களை கொண்ட குழு விபத்து நடந்த இடத்தில் உள்ள நிலவரங்களையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் கண்காணித்தது.
கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் குழுவினர் விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் குறித்து விபரம் சேகரித்து தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்தது. அந்த விபரங்களின் அடிப்படையில் தொடர் நடவடிக்கைளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வீடியோ கால் மூலம் கள நிலவரத்தை எடுத்துரைத்து இருக்கிறார். தலைமைச் செயலகத்தில் ஒடிசா சென்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் அடங்கிய தமிழ்நாட்டு குழுவினருடன் வீடியோ கால் மூலம் மீட்புப் பணி நிலவரம் மற்றும் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் பாதுகாப்பு, மீட்புப் பணிகள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ உதவிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் மற்றும் ஒடிசா மாநில அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தார்கள்.












Click it and Unblock the Notifications