காவிரி நீரைத் திறக்கும் வரை கர்நாடகா மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க கூடாது: தமிழக அரசு புதிய மனு
டெல்லி: காவிரியில் நீரை திறந்துவிடும் வரை கர்நாடகா அரசின் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தக் கூடாது என தமிழக அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு செப். 21-ந் தேதி முதல் செப். 27-ந் தேதி வரை 6,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை கர்நாடகா ஏற்கவில்லை.

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து கர்நாடகா அரசு சிறப்பு சட்டசபையைக் கூட்டி, காவிரி நீர் குடிநீருக்கு மட்டும்தான் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் உச்சநீதிமன்றத்தில் இன்று புதியதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அம்மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்துக்கான காவிரி நீரை டிசம்பர் மாதம் திறந்துவிடப்படும் நீருடன் சேர்த்து தருகிறோம்; முந்தைய உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அதில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி காவிரியில் கர்நாடகா அரசு நீரைத் திறந்துவிடும் வரை அம்மாநில அரசு தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை நடைபெறும்போது தமிழக அரசின் இப்புதிய மனு மீதும் விசாரிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications