ஹைட்ரோ கார்பன் பற்றி தமிழக எம்பிக்கள் கேள்வி.. அமைச்சரின் திருப்தி இல்லாத பதிலால் ராஜ்ய சபாவில் அமளி
ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் வறட்சி குறித்து தமிழக எம்பிக்கள் ராஜ்ய சபாவில் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரியாக பதில் அளிக்காததால் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
டெல்லி: டெல்லியில் தொடர்ந்து 16வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இன்று ராஜ்ய சபாவில் தமிழக எம்பிக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் எம்பிக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ள நிவாரணத்திற்காக 1000 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கியதை பதிலாக எடுத்துக் கூறினார். இதனை ஏற்க மறுத்த தமிழக எம்பிக்கள் ராஜ்ய சபாவில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
ராஜ்ய சபாவில் திமுக எம்பி திருச்சி சிவா இதுகுறித்து பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழக விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினார்.