வேட்பாளர்கள் தேர்வு எதை மையமாக வைத்து நடந்தது? இளங்கோவன் சொல்வது இதுதான் !
டெல்லி: சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்ய 27 பேர் கொண்ட குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். அவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேரை தேர்வு செய்துள்ளனர். அந்த பட்டியலை இளங்கோவன் கட்சி மேலிடத்தில் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன் கூறுகையில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் வேட்பாளர்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. 41 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார் என கூறினோம். வெற்றி வாய்ப்பு பற்றி விவாதித்தோம். இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் விவரம்:
கேள்வி: வேட்பாளர்கள் தேர்வு எதை மையமாக வைத்து நடந்தது?
பதில்: யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் கிடைக்கும். யார் உண்மையான காங்கிரஸ் கட்சிக்கு உழைக்கக் கூடியவரோ, அவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
கேள்வி: தேர்தல் பிரச்சாரங்களுக்கு ராகுல், சோனியா வருவார்களா?
பதில்: நிச்சயமாக ராகுல், சோனியா ஆகியோர் வருவார்கள். திமுக தலைவர்களோடு அவர்கள் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ளது.
கேள்வி: உங்கள் கட்சி பிரச்சாரம் எப்போது ஆரம்பிக்கும்?
பதில்: வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டவுடன் பிரசாரம் ஆரம்பிக்கும். மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கேள்வி: காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது.
பதில்: திமுக - காங்கிரஸ் - முஸ்லீம் லீக் கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications