ரொம்ப வேதனையாக இருக்கு.. 2 நிமிடத்தில் கவிழ்க்கப்படும் ஆட்சி.. சொந்த கட்சியையே சாடிய பாஜக எம்எல்ஏ
போபால்: நாட்டில் 2 நிமிடத்தில் ஆட்சி கவிழ்க்கப்படுகிறது என சொந்த கட்சியையே மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ நாராயண் திருப்பதி விமர்சனம் செய்தார்.
Recommended Video
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். இங்கு மைஹார் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் நாராயண் திருப்பதி.
இவர் இந்த தொகுதியில் இருந்து 4வது முறையாக எம்எல்ஏவாக உள்ளார். மத்திய பிரதேச மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.

நாராயண் திருப்பதி எம்எல்ஏ
இந்நிலையில் தான் நாராயண் திருப்பதி பாஜக கட்சியை விமர்சனம் செய்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது பாஜகவுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டதாக தெரிவித்த அவர் நாட்டில் உள்ளாட்சி நிர்வாகங்களை கலைப்பது போல் ஆட்சியும் 2 நிமிடங்கள் கலைக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்தார். இதுபற்றி நாராயண் திருப்பதி கூறியதாவது:

பாஜகவுக்கு ஓட்டு சேகரிக்கும் அதிகாரிகள்
நான் பாஜகவுக்கு எதிரானவன் இல்லை. ஆனால் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் உண்மையில் எனக்கு வேதனை அளிக்கிறது. நான் மைஹார் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். அரசு துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவரும் குறிப்பிட்ட கட்சிக்காக பிரசாரம் செய்கின்றனர். அதாவது பாஜகவுக்கு ஓட்டு சேகரிக்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

2 நிமிடத்தில் ஆட்சி கலைப்பு
ஒரு பாஜக எம்எல்ஏவாக இதுபோன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது எனக்கு வேதனையும், கலக்கமும் ஏற்படுகிறது. இன்றைய நாளில் நாட்டில் 2 நிமிடத்தில் ஒரு அரசை கவிழ்க்கும் நிலை உள்ளது. இது உள்ளாட்சி நிர்வாகிகங்களிலும் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது'' என கூறினார்.

விவாதமான கருத்து
இந்தியாவில் கர்நாடகம், கோவா, மத்திய பிரதேசம், தற்போது மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களில் எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் இழுத்து ஆட்சியை கவிழ்த்து பாஜக அரியணையில் அமர்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மத்திய பிரதேசத்தில் கூட முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. 2020ல் இவரது ஆட்சி கவிழ்ந்த நிலையில் தான் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் ஆட்சி அமைத்தது. இந்த வேளையில் பாஜக எம்எல்ஏவான நாராயண் திருப்பதியின் இந்த பேச்சு விவாதமாகி உள்ளது.

உண்மையை கூறியதாக காங்., பாராட்டு
பாஜக எம்எல்ஏ நாராயண் திரிபாதியின் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், ‛‛பாஜகவில் உண்மையை பேசத்துணிந்த நபர் ஒருவர் இருக்கிறார். ஆயிரக்கணக்கானவர்களின் வலிகளை நீங்கள் வெளிப்படுத்தி உள்ளீர்கள். ஜனநாயகம் வெளிப்படையாக தகர்க்கப்பட்டுள்ளது என்பதை கூறியுள்ளீர்கள். நாராயண் திரிபாதிக்கு வாழ்த்துக்கள்'' என தெரிவித்துள்ளார்.

கட்சி மாறும் எம்எல்ஏ
தற்போது கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ நாராயண் திரிபாதி பல கட்சிகளுக்கு மாறியுள்ளார். சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளை துறந்த இவர் தற்போது பாஜகவில் உள்ளார். மைஹார் தொகுதியில் 2003ல் சமாஜ்வாதி சார்பிலும், 2013ல் காங்கிரஸ் வேட்பாளராகவும், 2016 இடைத்தேர்தலில் பாஜக சார்பிலும் நாராயண் திரிபாதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2018 ல் நடந்த தேர்தலில் மீண்டும் பாஜக சார்பில் மைஹார் தொகுதியில் களமிறங்கி வாகை சூடி தற்போது இந்த கருத்தை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications