3 வயது குழந்தையை மீட்பதற்காக உ.பியில் இருந்து மபி வரை நிற்காமல் சென்ற ரயில்.. காத்திருந்த ஷாக்!
போபால்: உத்தரப் பிரதேசத்தில் ரயிலில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தையை மீட்க சிறப்பு ரயில் ஒன்று மத்தியப் பிரதேசம் வரை சுமார் 260கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்காமல் இயக்கப்பட்டது. இறுதியாக ரயிலை சுற்றி வளைத்து குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
ஸாத்புராவைச் சேர்ந்த ஆஷா ரெய்க்வார் என்ற பெண்ணின் 3 வயது குழந்தை காவ்யா கடந்த 25ந்தேதி அன்று அதிகாலையில் உத்தரப்பிரதேச மாநில லலித்பூர் ரயில் நிலையம் அருகே திடீரென மாயமானது.
தனது குழந்தையை கடத்திக்கொண்டு ஒருவர் செல்கிறார் என்று ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் அந்த பெண் ரயிலை பார்த்து கூச்சலிட்டுள்ளார்.

குழந்தையுடன் இளைஞர்
இதையடுத்து லலித்பூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) கேப்டன் எம்.எம் பேக் உடனடியாக சிசிசிடிவி கேமராவை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். சிசிடிவியை ஆராய்ந்த ரயில்வே போலீசார் அங்கிருந்து புறப்பட்ட ரப்திசாகர் என்ற சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலில் ஒரு இளைஞர் குழந்தையுடன் ஏறுவது தெரிந்தது.

சுற்றிவளைத்த போலீஸ்
இதையடுத்து ஜான்சி சந்திப்பில் ரயில்வே இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுத்தனர், அவர் இயக்கக் கட்டுப்பாட்டுக்குத் தெரிவித்தார். இதனை அடுத்து போபாலுக்கு செல்லும் அந்த ரயிலை வழியில் எங்கும் நிற்காமல் செல்லும்படி ரயில் ஓட்டுனருக்கு வயர்லெஸ் மூலம் உத்தரவிடப்பட்டது. அதன்படி ஜான்சியில் ரயில் நிற்கவில்லை. அதற்கு பதிலாக லலித்பூர் நிலையத்திலிருந்து 241 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போபால் வரை தொடர்ந்து இயக்கப்பட்டது. போபால் சென்றதும் அந்த ரயிலை சுற்றி வளைத்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் கடத்தல்காரனிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். கடத்தியவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

கடத்தியவர் தந்தை
அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் குழந்தையின் தந்தை என்பது தெரியவந்தது. மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு குழந்தையை அழைத்துக்கொண்டு ரயிலில ஏறி இருக்கிறார். ஆனால் அவரது மனைவியோ , தனது குழந்தையை ஒருவர் கடத்துவதாக கத்தி கூச்சலிட்டிருக்கிறார். இதை உண்மை என்று நம்பி போலீசார் ரயிலை நீண்ட நேரம் எங்கும் நிற்காமல் இயக்கி குழந்தைய பத்திரமாக மீட்டுள்ளனர்.

கடும் எச்சரிக்கை
இதையடுத்து கோபம் அடைந்த போலீசார், கணவன் மற்றும் மனைவி இருவரையும் கடுமையாக எச்சரித்தனர். ஆலோசனை வழங்கிய அவர்கள், லலித்பூருக்கு அழைத்து வந்து சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் இரு மாநில ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications