ரயில் டிக்கெட்டுகள் இனி வீடு தேடி வரும்.. 'கேஷ் ஆன் டெலிவரி' வசதியும் உண்டு! ஐஆர்சிடிசி அசத்தல்
இனி ரயிலில் பயணிக்க டிக்கெட்டுகள் புக் செய்தால் வீட்டுக்கே அவற்றை அனுப்பும் 'பே ஆன் டெலிவரி' திட்டத்தை அமலுக்கு கொண்டுவருகிறது ரயில்வே துறை.
டெல்லி: இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.
ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி ஆன்லைன் மூலமாகவோ, ஐஆர்சிடிசி ஆப் மூலமாகவோ ரயில்வே டிக்கெட் பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இந்த வசதியை பெறுவதற்கு, வடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண் அல்லது பான் எண்ணை ஐஆர்சிடிசியில் பதிவு செய்திருக்க வேண்டும். 5000 ரூபாய் வரை டிக்கெட் பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணமாக 90 ரூபாயும், 5000 ரூபாய்க்கு மேல் பதிவு செய்வோருக்கு 120 ரூபாயும் வசூலிக்கப்படும்.
நெட்பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக கட்டணத்தை செலுத்தும் வசதி மட்டுமின்றி, டிக்கெட்டை பெறும்போது பணத்தை செலுத்தும், 'கேஷ் ஆன் டெலிவரி' திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் டிக்கட் டெலிவரிக்கு முன்பு அதனை ரத்து செய்தால் அதற்கான விநியோகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் சிரமம் முற்றிலுமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.