அமெரிக்க விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த பயிற்சி விமானி பலி
ஹைதராபாத்: ஆந்திராவைச் சேர்ந்த பயிற்சி விமானி ஒருவர், அமெரிக்காவின் ஹூக்ஸ் விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில் பலியானார்.
அவரது பெயர் சமகுரா கார்த்திக். ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஒற்றை என்ஜின் கொண்ட செஸ்னா விமானத்தில் ஹூக்ஸ் விமான நிலையத்தில் பயிற்சிக்காக கிளம்பியுள்ளார். அப்போது விமானம் திடீரென தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கி விழுந்தது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் என்ஜினில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தை தரையிறக்க முயற்சித்துள்ளார் கார்த்திக். அப்போது விமானம், வி்மான நிலைய ஹேங்கர் ஒன்றின் மீது விழுந்தது. இந்த விபத்தில் கார்த்திக்கின் பயிற்சியாளரும் இறந்து விட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம்தான் விமானி பயிற்சிக்காக அமெரிக்கா போயிருந்தார் கார்த்திக். இவரது தந்தை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறார். ஹைதராபாத்தில் தனது கல்லூரிப் படிப்பை முடித்த கார்த்திக், ஆந்திர பிரதேச விமானவியல் கழகத்திலும் விமானி பயிற்சியை எடுத்தவர் ஆவார்.