கேரளத்தில் புரட்சித் திருமணம்: திருநங்கையை மணந்த திருநம்பி
கேரளத்தில் திருநங்கையை பெற்றோர் சம்மதத்துடன் மணந்தார் திருநம்பி.
திருவனந்தபுரம்: கேரளத்தில் முதல் முறையாக திருநங்கையை பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவர் திருமணம் செய்து கொண்டு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இஷான் கே ஷான், சூர்யா ஆகிய இருவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இதில் சூர்யா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் சில மலையாள படங்களில் நடித்துள்ளார். இஷான் கே ஷான் தொழில் செய்து வருகிறார்.
இஷான் , கடந்த 2014- ஆம் ஆண்டு பெண்ணாக இருந்து ஆணாக மாறி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு சூர்யாவும் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.
இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்ய முடிவு செய்த இவர்கள் இருவரும் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கிக் கொண்டனர். இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் நடந்தது.
இரு வீட்டார் கலந்து கொண்டு இவர்களது திருமணத்தை கோலாகலமாக்கினர். வாக்காளர் அடையாள அட்டைகளிலும் சூர்யா பெண் என்றும் , இஷான் ஆண் என்றும் உள்ளதால் இவர்களது திருமணத்தில் சட்டரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை.
இவர்களது திருமணம் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. முதல்முறையாக திருநங்கை ஒருவரும் திருநம்பி ஒருவரும் திருமணம் செய்து கொண்டு கேரளத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.