தேர்தல் அதிகாரிகளை அடித்து உதைத்த மமதா கட்சி தொண்டர்கள்!
கொல்கத்தா: தேர்தல் ஆணையத்துடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் தேர்தல் அதிகாரிகளை அடித்து துவைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் அப்படியெல்லாம் மாற்ற முடியாது.. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் மமதா மிரட்டல் விடுத்தார்.
இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. பின்னர் ஒருவழியாக அடிபணிந்தது மேற்குவங்க அரசு.
தற்போது மேற்கு மாநிலத்தின் மால்டா மாவட்டத்தின் மாணிக்சாக் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், அந்த அதிகாரிகளை அடித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் தேர்தல் கமிஷ்ன் அறிக்கை கேட்டுள்ளது. மேலும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும், எப்.ஐ.ஆர். பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநில குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சர் சாப்த்ரி மிர்ஷா மற்றும் மால்டா தொகுதி வேட்பாளர் ஹூசேன் முன்னிலையில்தான் இந்த களேபரம் அரங்கேறி இருக்கிறது.