அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு மமதா பானர்ஜி கண்டனம்.. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என விமர்சனம்
கொல்கத்தா: டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இவரது கைதுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட இரண்டு அமைச்சர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஸ்கெட்ச் போடப்பட்டிருந்தது. எனவே வழக்கின் விசாரணைக்காக தொடர்ந்து சம்மன்கள் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், கெஜ்ரிவால் எதற்கும் பிடி கொடுக்காமல் பறந்து வந்தார். மறுபுறம் அமலாக்கத்துறை தனது பிடியை இறுக்கிக்கொண்டே வந்தது.

இறுதியாக நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தை அரவிந்த் கெஜ்ரிவால் நாடியிருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டோம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் கெஜ்ரிவாலின் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனையடுத்து கையில் கைது வாரண்ட்டுடன் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த ரெய்டில், கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாக அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்த இரண்டு மாதங்களில் அமலாக்கத்துறை இரண்டு முதலமைச்சர்களை கைது செய்துள்ளது.
இவரது கைதுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "ஊடகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடம் நிதியை பறிப்பது, எதிர்க்கட்சியின் வங்கி கணக்கை முடக்குவது போன்றவையும் ஒன்றிய அரசுக்கு போதவில்லை. இப்போது மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார்! 'இந்தியா' தக்க பதிலடி கொடுக்கும்" என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
அதேபோல "2024 தேர்தல்களுக்கு முன்னதாக, தோல்வி பயத்தால் சகோதரர் ஹேமந்த் சோரனை அநியாயமாகக் குறிவைத்ததைத் தொடர்ந்து, தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த கைது நடவடிக்கையின் மூலம் பாசிச பாஜக அரசு வெறுக்கத்தக்க ஆழத்தில் மூழ்க தொடங்கியுள்ளது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, தற்போது மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜியும், கெஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
"அரவிந்த் கெஜ்ரிவால் கைதை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டும் என்றே குறி வைக்கப்படுகிறார்கள். ஆனால், பாஜவுடன் இணைபவர்களுக்கு தண்டனைகள் ஏதும் கிடைப்பதில்லை. எதிர்க்கட்சி தலைவர்களின் கைது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்" என்று அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.












Click it and Unblock the Notifications