சிபிஎம் பெண்களை பலாத்காரம் செய்யுங்கள்... திரினமூல் நடிகர் திமிர் பேச்சு!
கொல்கத்தா: பிரபல பெங்காலி நடிகரும், திரினமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான தபஸ் பால், வாய்க் கொழுப்புத்தனமாக பேசியிருப்பது மேற்கு வங்கத்தில் பெரும் சர்ச்சையைக கிளப்பியது.
தனது ஆதரவாளர்களிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யவும் தயாராக இருங்கள் என்று அவர் பேசியதுதான் சர்ச்சைக்குக் காரணம்.
|
டிவி சானல்களில்
இதுதொடர்பாக அவர் பேசிய பேச்சு டிவி சானல்களில் ஒளிபரப்பாகியுள்ளது. தனது கட்சியினரிடையே பேசியபோது இப்படிக் கூறியுள்ளார் தபஸ் பால்.
பலாத்காரம் செய்ய தயாராக இருக்க வேண்டும்
அவர்களிடம் தபஸ் பால் பேசுகையில், உங்களை மாற்றுக் கட்சியினர் யாரும் தொந்தரவு செய்ய முடியாது. அதை நான் அனுமதிக்க மாட்டேன். தேவைப்பட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யக் கூட தயாராக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார் தபஸ் பால்.
முட்டாள்தனமான பேச்சு
இந்தப் பேச்சு குறித்து திரினமூல் காங்கிரஸ் கட்சி எம்.பியான டெரிக் ஓ பிரையன் கூறுகையில், இது முட்டாள்தனமான பேச்சு. இதை எங்களது கட்சி ஏற்காது, அனுமதிக்காது என்றார்.
கண்டனத்துக்குரிய பேச்சு
தபஸ் பால் பேச்சு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாலினி பட்டச்சார்யா கூறுகையில், இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் தரப்படும். லோக்சபா சபாநாயகரிடம் புகார் தரப்படும். இது கண்டனத்துக்குரிய பேச்சு. இதுகுறித்து நாடாளுமன்றமும் விசாரிக்க வேண்டும் என்றார்.