"பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும்! இந்த போட்டோ இப்போ தேவையா.." திரிணாமுல் எம்பி ஆவேசம்
கொல்கத்தா: குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் நேற்று விபத்தில் சிக்கிய நிலையில், பிரதமர் மோடி விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான சாகேத் கோகலே சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
குஜராத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று விபத்தில் சிக்கியது. விமானம் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய நிலையில், அது திடீரென விபத்தில் சிக்கியது. விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே அது அருகே உள்ள குடியிருப்பில் விழுந்து நொறுங்கியது.

பிரதமர் மோடி
விமானத்தில் 230 பயணிகள், 12 ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். அதில் ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 242 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடி விபத்து நடந்த இடத்தையும் உயிர் பிழைத்த நபரையும் சந்தித்துப் பேசிய போட்டோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன.
அதில் விமானம் கட்டிடத்தில் மோதிய இடத்தை மோடி பார்ப்பது போன்ற போட்டோ ஒன்று இடம் பெற்று இருந்தது. அது லோ ஆங்கிலில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோவாக இருந்தது. பிரதமர் மோடி விபத்தில் சிக்கிய விமானத்தைப் பார்வையிடும் போது அந்த போட்டோ எடுக்கப்பட்டது. இருப்பினும், இந்த போட்டோ தான் இணையத்தில் விமர்சனங்களைக் கிளப்பியது.
கிளம்பிய விமர்சனம்
விபத்து நடந்த நேரத்தில் இதுபோல விதவிதமான ஆங்கிள் போட்டோ எடுக்க வேண்டுமா என எதிர்க்கட்சிகள் சாடினர். விபத்து நடந்த இடத்தை பிரதமர் பார்வையிடுவது நல்ல விஷயம் தான் என்ற போதிலும் இதுபோல பல்வேறு ஆங்கிள் போட்டோ எடுத்து அதை வெளியிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
திரிணாமுல் எம்பி
இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான சாகேத் கோகலேவும் இந்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இவரிடம் ஏதோ பயங்கரமான மற்றும் அடிப்படை தவறு இருக்கிறது. இது போன்ற ஒரு பெரிய துயரம் நடந்திருக்கும்போது லோ ஆங்கிள் யார் போட்டோ எடுப்பார்கள்? பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
சாகேத் கோகலேவின் இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் இந்த ட்வீட்டை அவர் பதிவிட்ட சில மணி நேரங்களில் 1.5 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்து வருகின்றனர். சாகேத் கோகலேவின் இந்த ட்வீட்டிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு தரப்பினர் சகோத்தின் கருத்தை ஆமோதிக்கிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் பிரதமர் பார்வையிடும்போது போட்டோகிராபர் போட்டோ எடுத்துள்ளார்.. இதற்காகப் பிரதமர் மோடியை எப்படி குற்றம் சொல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நேற்று ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், சமீப ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. விபத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை தெரியவில்லை. அதேநேரம் விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் விபத்திற்கான காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications