குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து
குவகாத்தி: லோக்சபாவில் நிறைவேற்றிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து திரிபுரா மாநில நிர்வாகம், இணையதள சேவையை 48 மணி நேரம் நிறுத்தியுள்ளது.
"மனு மற்றும் காஞ்சன்பூர் பகுதிகளில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையிலான இன மோதல்கள் குறித்து வதந்திகள் பரவி வருகிறது, இது இப்பகுதியில் வன்முறை சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்கள் போலி படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரப்பட்டு, மாநிலத்தில் வன்முறையைத் தூண்டும் நோக்கம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது," என்று திரிபுரா அரசு தெரிவித்துள்ளது.
நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்று பிற்பகல் 2 மணி முதல் எஸ்எம்எஸ் மற்றும் மொபைல் டேட்டாக்களை 48 மணி நேரம் பயன்படுத்துவதை தடை செய்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. பத்திரிகை செய்திகளுக்கும் இது பொருந்தும்.
ரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்
இந்த மசோதாவுக்கு எதிராக பழங்குடியினர் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அழைத்த மாநிலம் தழுவிய காலவரையற்ற பந்தைத் தொடர்ந்து திரிபுராவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசு பள்ளிகள், அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்தும், பாதிக்கப்பட்டது.
வடகிழக்கின் பிற மாநிலங்களும் இதேபோன்ற போராட்டங்களை எதிர்கொள்கின்றன. சர்ச்சைக்குரிய குடியுரிமை (திருத்த) மசோதாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் அசாம் தலைநகர் குவாஹாத்தியின் பல்வேறு பகுதிகளில் பெரும் ஊர்வலங்களை நடத்தினர்.
குவஹாத்தியில் உள்ள அரசு செயலகம் மற்றும் சட்டமன்ற கட்டிடங்களுக்கு அருகே பாதுகாப்பு படையினருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். வழித்தடங்களைத் தடுத்ததால் அசாம் முழுவதும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
குவஹாத்தி நகரின் மாலிகான் பகுதியில், அரசு பஸ்ஸில் கற்கள் வீசி சேதப்படுத்தப்பட்டது. ஸ்கூட்டரில் தீ வைக்கப்பட்டது. கடைகள், சந்தைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. கல்வி மற்றும் நிதி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.