828 மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு- 47 பேர் பலி- உண்மை..ஆனால் நடந்தது இதுதான்-திரிபுரா அரசு விளக்கம்!
அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் 828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் எனப்படும் எச்.ஐ.வி. பாதிப்பு உண்மைதான் என்றும் 47 பேர் மாணவர்கள் பலியாகி இருப்பதும் உண்மைதான் என்றும் அம்மாநில அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை அனைத்துமே 2007-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரையிலான 17 ஆண்டு காலத்திற்கானவை எனவும் அந்த அமையம் தெரிவித்துள்ளது.
திரிபுரா அரசு எய்ட்ஸ் தடுப்பு மைய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. அதில், திரிபுராவில் மட்டும் 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 47 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த பாதிப்புடனேயே பல மாநிலங்களில் திரிபுரா மாணவர்கள் கல்வி நிலையங்களில் சேர்ந்தும் உள்ளனர். இவர்களில் 220 பள்ளிக் கூடங்கள், 24 கல்லூரிகளில் ஊசி மருந்து பயன்பாட்டின் மூலம் (போதைப் பொருள் பயன்பாடு மூலம்) எச்.ஐ.வி பரவி இருப்பதும் உறுதியாகி உள்ளது. என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது திரிபுராவில் போதை ஊசி பயன்பாட்டால் எச்.ஐ.வி. தொற்று பரவியது என்பதுதான் அந்த செய்திகளின் மற்றொரு சாராம்சம்.

இந்த செய்தி நாடு முழுவதும் விவாதங்களையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து திரிபுரா அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உண்மைதான். 47 மாணவர்கள் பலியானதும் உண்மைதான். ஆனால் இந்த புள்ளி விவரம் என்பவை 2007-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரையிலான 17 ஆண்டுகளுக்கானவை.
மேலும் 2022- 23-ம் ஆண்டு மட்டும் திரிபுராவில் மொத்தம் 1847 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 67 பேர் உயிரிழந்தனர். 2023-24-ம் ஆண்டில் 1790 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதியானது. இவர்களில் 44 பேர் உயிரிழந்தனர் என விளக்கம் தரப்பட்டுள்ளது. திரிபுரா பாதிப்பு தொடர்பான அம்மாநில அரசு தரப்பு வெளியிட்ட இத்தரவுகளும் பெரும் அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications