"வெறி".. நானே வருவேன் பாணியில்.. குடும்ப உறுப்பினர்களையே "கொடூரமாக" கொன்ற சிறுவன்.. பரபர பின்னணி
அகர்தலா: தனது அம்மா, தங்கை உட்பட 4 குடும்ப உறுப்பினர்களை 15 வயது சிறுவன் துடிக்க துடிக்க கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் திரிபுராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அவர்களை கொன்றுவிட்டு ஹாயாக டிவி பார்த்தப்படியே சடலங்களை வீட்டுத் தோட்டத்தில் தனி ஆளாக புதைத்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், அந்த சிறுவனின் செல்போனில் க்ரைம் செய்திகளும், வீடியோக்களும் கொட்டிக் கிடப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தீய நண்பர்கள் சகவாசம்..
திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்தான் தேவ்நாத். வங்கியில் பணிபுரிந்து வரும் இவருக்கு சுப்ரியா தேவ்நாத் (15) என்ற மகனும், சுபார்னா (10) வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களில் சுப்ரியா தேவ்நாத் ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் எப்போதும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்த சுப்ரியாவை, கொரோனா ஊரடங்கு அப்படியே தலைகீழாக மாற்றியது. சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் பள்ளி மூடப்பட்டதால் தனது தெருவில் வசிக்கும் மோசமான சிறுவர்களுடன் சுப்ரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் சிகரெட், மதுப்பழக்கத்துக்கு ஆளானார் சுப்ரியா.

க்ரைம் நியூஸுக்கு அடிமை
அதேபோல, ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போனும் கையில் கிடைத்ததால், சுப்ரியா இணைய விளையாட்டுகளுக்கும் அடிமையானார். ஆன்லைன் விளையாட்டு போக, பிற நேரங்களில் தனது செல்போனில், கொலை சம்பவங்கள் தொடர்பான 'க்ரைம்' செய்திகளையும், வீடியோக்களையும் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் சுப்ரியா. இதனால் இவரை அவரது பெற்றோர் அடிக்கடி கண்டித்துள்ளனர். இதன் காரணமாக, சுப்ரியாவுக்கு அவரது பெற்றோர் மீது ஒருவித வெறுப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது தங்கை சுபார்னாவுடன் ஒப்பிட்டு பேசுவதால் அவர் மீது இவருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

துடிக்க துடிக்க கொலை
இந்நிலையில், கடந்த வாரம் சுப்ரியாவின் தாத்தா - பாட்டி (ஹர்தான் தேவ்நாத்தின் பெற்றோர்) அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்களும் சுப்ரியாவின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்ரியா, அவர்களை கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி, நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தோட்டத்தில் இருந்த கோடாரியை எடுத்து வந்த சுபார்னா, தூங்கிக் கொண்டிருந்த தனது தாய் ஸ்மித்தா (32), தாத்தா, பாட்டி, தங்கை சுபார்னா, அத்தை ரேகா (42) ஆகியோரை சரமாரியாக தலையில் வெட்டினார்.

கைது நடவடிக்கை
மேலும், அவர்கள் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக டிவியில் சத்தமாக பாட்டை வைத்துள்ளார் சுப்ரியா. இதையடுத்து, அவர்கள் துடிதுடித்து இறப்பதை டிவி பார்த்துக் கொண்டே ரசித்த சைக்கோ சிறுவன் சுப்ரியா, அவர்களின் சடலங்களை தனி ஆளாக தோட்டத்தில் தனி ஆளாக புதைத்துள்ளார். ஆனால் வீட்டில் உள்ள ரத்தக்கறைகளை சுத்தம் செய்யாமல் அப்படியே அதன் மீது அவன் படுத்து டிவி பார்த்துள்ளான். இந்நிலையில், மதியம் வீட்டுக்கு வந்த ஹர்தான் தேவ்நாத் இந்தக் காட்சியை பார்த்து பயந்து போலீஸுக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் போலீஸார் அங்கு வந்து சுப்ரியாவை கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications