தொடங்கியது லோக்சபாவில் பஞ்சாயத்து- டி.ஆர்.எஸ். பிஜூ ஜனதா தள எம்.பி.க்கள் அமளி!!
டெல்லி: லோக்சபாவில் முதல் கூட்டத் தொடரில் முதல் பஞ்சாயத்தை கூட்டியிருக்கின்றனர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் பிஜூ ஜனதா தள எம்.பிக்கள். போலாவரம் அணை திட்டம் தொடர்பான அவசர சட்டத்துக்கு எதிராக இரு கட்சி எம்.பிக்களும் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் மழைக்காலங்களில் கோதாவரி ஆற்றுக்கு வரும் அதிகப்படியான வெள்ள நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் அந்த தண்ணீரை சேமிப்பதற்காக போலாவரம் அணைத்திட்டத்தை கம்மம்-கோதாவரி மாவட்டத்தில் நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

இந்த அணை திட்டத்தின் போது நீரில் மூழ்கி விடும் பகுதிகளான கம்மம் மாவட்டத்தில் உள்ள 7 மண்டலங்கள் சீமாந்திராவில் இணைக்க வகை செய்து மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதற்கு தெலுங்கானா, ஒடிஷா, சத்தீஸ்கர் மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த 3 மாநிலங்களைச் சேர்ந்த கோயா இனபழங்குடிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் லோக்சபாவில் இன்று மத்திய அரசின் அவசர சட்டத்தை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தாக்கல் செய்தார்.
அப்போது மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் பிஜூ ஜனதா தள எம்.பி..க்கள் குரல் எழுப்பினர். மேலும் சபையின் மையப்பகுதிக்கு வந்த அவர்கள், சபாநாயகர் இருக்கை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications