பாலியல் புகார்.. “என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற முயற்சித்தால்..” மேற்கு வங்க ஆளுநர் பரபர!
கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீது, ராஜ் பவன் தற்காலிக பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்ததாக தகவல் வெளியான நிலையில், தன் மீதான குற்றசாட்டை மறுத்துள்ளார் ஆளுநர் ஆனந்த போஸ்
ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சிவி ஆனந்த போஸ், தற்போது மேற்கு வங்க ஆளுநராகப் பணியாற்றி வருகிறார். ஆனந்த போஸ் கடந்த நவம்பர் 23, 2022 முதல் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீது கொல்கத்தா ராஜ் பவனில் பணியாற்றும் தற்காலிக ஊழியரான பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். கொல்கத்தா ஹரே ஸ்ட்ரீட் பகுதி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் தனக்கு நிரந்தர வேலை வழங்குவதாகக் கூறி அழைத்து, தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக எழுத்துப்பூர்வமாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். ஆளுநர் மீது ராஜ் பவன் பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜ் பவனில் பணியாற்றும் பெண் ஊழியர் புகார் அளித்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி சகாரிகா கோஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். எவ்வளவு பயங்கரமான விஷயம் இது என அவர் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலேவும் இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டார். மேற்கு வங்காள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஷஷி பஞ்சா, ஆளுநர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து ஒரு பெண்ணை சித்திரவதை செய்ய பயன்படுத்தியது வெட்கக்கேடானது என்றார்.
இந்த நிலையில், இது தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் மாளிகை, எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் கூறியதாக வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், "உண்மை வெல்லும். உருவாக்கப்பட்ட கதைகளால் நான் பயப்பட மாட்டேன். யாரேனும் என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால், கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்.
ஆனால், மேற்கு வங்கத்தில் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை அவர்களால் ஒருபோதும் தடுக்க முடியாது" என ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளதாக ராஜ் பவன் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்று தமது செய்தியில், பெண் ஊழியர் ஒருவர் தன்னோடு ராஜ் பவனில் பணிபுரியும் தனது நண்பரின் உதவியுடன், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் மாளிகை வாயிலாக அனுப்பப்படும் புகார்களை தடுத்ததாகவும், அதற்காக அவரை ஆளுநர் கண்டித்தபோது, அவர் வெளியே சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்ததாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications