ஜெ. இடத்தை பிடிப்பாரா டிடிவி.தினகரன்?
இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி.தினகரனை முதல் குற்றவாளியாக சேர்க்க டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
டெல்லி: இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி.தினகரனை முதல் குற்றவாளியாக சேர்க்க டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் இடத்தை டிடிவி தினகரன் பிடிப்பார் என தெரிகிறது.
முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த 4 நாட்களாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

4 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் டெல்லி போலீஸார் தினகரனை கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தினகரனின் நண்பரான பெங்களூருவைச் சேர்ந்த மல்லிகார்ஜூனாவும் தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
37 மணி நேரம் விசாரணை
இரட்டை இலைச்சின்னத்தை பெற 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசி ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை முதற்கட்டமாக கொடுத்ததாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 4 நாட்களில் தினகரனிடம் டெல்லி போலீஸார் சுமார் 37 மணி நேரம் விசாரணை நடத்தி வந்தனர்.
டிடிவி தினகரன் அதிரடி கைது
இதில் சுகேஷை யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறிய டிடிவி.தினகரன் பின்னர் சுகேஷிடம் பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளனர்.
முதல் குற்றவாளியா?
தினகரனை கைது செய்துள்ள டெல்லி போலீஸ் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் டிடிவி.தினகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா தான் முதல் குற்றவாளி
ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏ1 அதாவது முதல் குற்றவாளி என்றும் அவரது தோழியும் டிடிவி.தினகரனின் சின்னம்மாவுமான சசிகலா இரண்டாவது குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டனர். ஆனால் ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
டிடிவி.தினகரனே மூலக்காரணம்
இந்நிலையில் ஜெயலலிதா விட்டுச்சென்ற முதல் குற்றவாளி என்ற இடத்தை நிரப்பும் வகையில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி.தினகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது. லஞ்சக் குற்றத்துக்கு டிடிவி.தினகரனே மூலக்காரணம் என்பதால் அவர் தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications