காஷ்மீரில் காங்.-க்கு ஆப்பு வைத்த குலாம் நபி ஆசாத்- 20 மூத்த தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் அரசியலில் புதிய திருப்பமாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 20 பேர் கட்சிப் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். பதவிகளை ராஜினாமா செய்த அனைவருமே மூத்த காங்கிரஸ் தலைவரும் பாஜகவுடன் மிக நெருக்கமானவருமான குலாம்நபி ஆசாத்தின் ஆதரவாளர்கள்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான குலாம்நபி ஆசாத் மிக நீண்டகாலமாகவே பாஜகவுடன் நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது ரத்து செய்யப்பட்ட போது குலாம் நபி ஆசாத் மீது மட்டும் எந்த சட்ட நடவடிக்கையும் பாயவில்லை.
பின்னர் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எதிராக குலாம் நபி ஆசாத் தலைமையில் 23 தலைவர்கள் கடிதம் எழுதினர். அப்போதிருந்தே குலாம்நபி ஆசாத்தை கழற்றிவிடுவது என காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இதனால் குலாம் நபி ஆசாத்தின் கட்சி பதவி பறிப்பு உள்ளிட்டவை நிகழ்ந்தன.

குலாம் நபிக்கு மோடி ஆதரவு
இதனையடுத்து ராஜ்யசபா எம்.பி. பதவியை மீண்டும் பெறுவதற்கு குலாம் நபி ஆசாத் முயற்சித்தார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், குலாம் நபி ஆசாத் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாவதையும் விரும்பவில்லை. இதனால் குலாம் நபி ஆசாத்துக்கான பிரிவு உபசார விழாவின் போது ராஜ்யசபாவில், பிரதமர் மோடிதான் கண்ணீருடன் உருக்கமாக அவருக்கு ஆதரவாக பேசினார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கண்டு கொள்ளவும் இல்லை.

காங்கிரஸில் ஸ்லீப்பர் செல்
அப்போதே, குலாம் நபி ஆசாத்தை பாஜக துணை ஜனாதிபதியாக்கி ராஜ்யசபா தலைவராக கொண்டுவரவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது எனவும் கூறப்பட்டது. இப்படி தொடர்ந்து பாஜகவுடன் இணக்கமான இருந்தாலும் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகவில்லை. பாஜகவின் ஒரு ஸ்லீப்பர் செல்லாகவே காங்கிரஸுக்குள் வலம் வந்த அவர் தற்போது தமது வேலையை காட்டத் தொடங்கிவிட்டார்.

20 தலைவர்கள் பதவி விலகல்
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 20 பேர் இன்று கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்பது உட்பட குலாம்நபி ஆசாத் கூறிவரும் அதே வாசகங்களைத்தான் இவர்களும் கூறுகின்றனர். இன்று பதவியை ராஜினாமா செய்த 20 பேரும் குலாம்நபி ஆசாத்தின் தீவிர ஆதரவாளர்கள்தான். ஆகையால் குலாம் நபி ஆசாத்தின் சதித் திட்டமாகவே இதனை காங்கிரஸ் மேலிடம் பார்க்கிறது.

அமரீந்தர்சிங்க் பாணியில் ஆசாத்?
பஞ்சாப்பில் அண்மையில் காங்கிரஸில் இருந்து அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் விலகினார். தனிக்கட்சி தொடங்கும் தாம் பாஜகவுடன் கூட்டணி வைப்பேன் என்றார். அதே பாணியில் குலாம்நபி ஆசாத் பயணிக்கப் போகிறாரோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸுக்கு வேட்டு வைக்கும் வேலைகளை அவர் மும்முரமாக மேற்கொண்டிருப்பது உணர்த்துகிறது என்கின்றனர் காஷ்மீர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications