தேர்தல் ஆணையத்தில் உள்ள கறுப்பு ஆடு யார்... டெல்லி போலீஸ் தீவிர விசாரணை
இரட்டை இலை சின்னத்துக்காக தினகரனுடன் பேரம் பேசிய தேர்தல் ஆணைய அதிகாரி குறித்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி: இரட்டை இலை சின்னத்துக்காக தினகரனுடன் பேரம் பேசிய தேர்தல் ஆணைய அதிகாரி குறித்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திராவும், டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டனர். மேலும் பண பட்டுவாடா விவரங்களை தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனன் கவனித்து கொள்வதால் அவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்ட தினகரனும், மல்லிகார்ஜுனனும் போலீஸார் 5 நாள்கள் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ராஜாஜி பவன், தினகரனின் வீட ஆகிய இடங்களில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் தினகரகனின் மனைவி அனுராதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கொளப்பாக்கம், ஆதம்பாக்கம், பெரம்பூர் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தி 16 பேருக்கு டெல்லி போலீஸார் சம்மன் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை தினகரன், மல்லியை அழைத்துக் கொண்டு டெல்லி புறப்பட்ட போலீஸார், நாளை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அதற்கு முன்னதாக தினகரனிடம் பேரம் பேசிய தேர்தல் அதிகாரி யார் என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த தினகரனை மீண்டும் போலீஸ் கஸ்டடியில் எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.