”ராமேஸ்வரம் கபே” வசமாய் சிக்கிய மாஸ்டர் மைண்ட்..சுற்றி வளைத்து கைது செய்த என்ஐஏ.! சென்னையில் தஞ்சமா?
கொல்கத்தா: இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவரை கொல்கத்தாவில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.
முகமூடி அணிந்த குற்றவாளி, ஐஇடி குண்டு, வெளிநாட்டு தொடர்பு என பல முடிச்சுகளை அவிழ்த்து புலனாய்வுத் துறையினர் குற்றவாளிகளை நெருங்கியது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்குள் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ராமேஸ்வரம் கபே: கோவை கார் குண்டு வெடிப்பு, கேரள சர்ச் குண்டுவெடிப்புக்கு பிறகாக நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ தீவிர கவனம் செலுத்தியது. பெங்களூரின் மிக புகழ்பெற்ற ராமேஸ்வரம் கபே உணவகத்தில் பரபரப்பான விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியது.
அதிச்சி சம்பவம்: இந்த சம்பவத்தில் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்கள் உட்பட 10 பேர் குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதை அடுத்து இந்த வழக்கானது பெங்களூரு காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது.
என்ஐஏ விசாரணை: கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட குண்டுவெடிப்பில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளோடு, குண்டை வைத்து சென்றவரின் புகைப்படங்களும் வெளியாகின. குற்றவாளிகள் தொடர்ந்து மறைவாக இருந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் அடுத்தடுத்து சிலர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தனர்.
முக்கிய குற்றவாளிகள்: இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் எனவும் கிரிப்டோ கரன்சி அல்லது ஹவாலா மூலம் இவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான் பெங்களூரு ராமேஸ்வரம் குண்டு வைத்த நபரையும் திட்டம் தீட்டி கொடுத்த வரையும் கொல்கத்தாவில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 42 நாட்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.
அதிரடியாகக் கைது: அதன்படி கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முசபீர் உசேன் - அப்துல் மதீன் தாகா ஆகியோர் மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்டது. முசாபீர் உசேன் குண்டுவைத்ததாகவும், அப்துல் மதீன் திட்டம் தீட்டிக் கொடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரும் IS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் NIA அறிவித்தது. தொடர்ந்து போலிஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் மூலம் கிரிப்டோகரண்சி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் குண்டுவெடிப்பு நடத்த இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்
சென்னையில் தஞ்சம்?: இந்நிலையில் சென்னையில் ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இருவரும் மாறி மாறி தஞ்சம் புகுந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பின் கொல்கத்தா அருகே இருவரும் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாக NIA அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து இருவரிடமும் நடத்தப்படும் விசாரணையின் எதிரொலியாக பல்வேறு முக்கியத் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications