பரூக் அப்துல்லா கூட்டம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: நெரிசலில் சிக்கி 10 பேர் காயம்
ஸ்ரீநகர்: காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பங்கேற்ற பிரசார கூட்டத்திற்கு அருகே இன்று காலை அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நெரிசலில் சிக்கி 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஸ்ரீநகருக்கு அருகே உள்ள ஹன்யர் பகுதியில் காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் பிரசாரம் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கலந்து கொண்டார்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பட்கம் மாவட்டம் மகம் பகுதியில் ஸ்ரீநகர்-குல்மர்க் சாலையில் 11.45 மணிக்கு, மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த நடந்த இந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிர்பலி ஏதும் ஏற்படவில்லை. ஆனால், சத்தம் கேட்டு மக்கள் சிதறி ஓடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 15 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்து இரு இடங்களில் குண்டுவெடிப்புக்கள் நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் காஷ்மீர் அரசு அதனை மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications