இன்ஸ்டாகிராம் லைவில் 160 கிமீ வேகம்.. அடுத்த நொடி ஏற்பட்ட கொடூர விபத்து! பறிபோன இரண்டு உயிர்கள்! ஷாக்
காந்தி நகர்: இன்ஸ்டாகிராம் தளத்தில் லைவ் செய்யும் போது மணிக்கு சுமார் 160 கிமீ வேகத்தில் சென்ற இளைஞர்கள் கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதனால் இரண்டு உயிர்கள் பரிதாபமாக பறிபோயுள்ளது.
இந்த காலத்தில் இளைஞர்கள் ரியல் வாழ்க்கையை விட சோஷில் மீடியா வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் லைக்களை பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் ஏகப்பட்ட விஷயங்களை செய்கிறார்கள்.

அதில் சில சமயங்கள் எல்லை மீறிவிடுகிறார்கள். அப்போது அவை மிக மோசமாக முடிந்துவிடுகிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் குஜராத்தில் நடந்துள்ளது.
விபத்து: குஜராத் மாநிலத்தில் 22 முதல் 27 வயதிற்கு உட்பட்ட ஐந்து இளைஞர்கள், அகமதாபாத்தில் இருந்து தங்கள் சுஸுகி பிரெஸ்ஸாவில் மும்பைக்குச் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் தங்கள் பயணத்தை இன்ஸ்டாகிராமில் லைவ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி அவர்கள் சுமார் 160 கிமீ வேகத்தில் சென்று அதை இன்ஸ்டாகிராமில் லைவ் செய்த நிலையில், அதுவே பெரிய விபத்தில் முடிந்துள்ளது. இந்த மோசமான விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்படும் சமயத்தில் அவர்கள் பகிர்ந்த இன்ஸ்டா லைவ் வீடியோ இணையத்தில் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
இன்ஸ்டா லைவ்: அந்ச வீடியோவின் பின்னணியில் சினிமா பாடல்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. அப்போது வீடியோவில் வரும் இரண்டு இளைஞர்கள் தங்கள் பயணத்தை விளக்குகிறார்கள். அதிகாலை நேரத்தில் அவர்கள் இந்த வீடியோவை எடுத்துள்ளது போலவே தெரிகிறது. போதிய வெளிச்சம் இல்லாததால் செல்போன் ஃப்ளாஷ் லைட்டை அவர்கள் வீடியோ எடுக்க பயன்படுத்தி உள்ளனர். காரில் இருக்கும் மற்ற பயணிகள் சில் செய்து கொண்டு இருக்க அந்த இருவரும் தங்கள் பயண திட்டத்தை விளக்கி உள்ளனர்.
160 கிமீ வேகம்: அப்போது காரில் இருந்த இளைஞர் ஒருவர், "கார் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என பாருங்கள்" என்று கூறுகிறார். தொடர்ந்து அவர்கள் காரின் ஸ்பீடோமீட்டரை காட்டுகிறார்கள். அதில் அவர்கள் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்வது தெளிவாக தெரிகிறது. அப்போது அவர்கள் சாலையில் செல்லும் மற்றொரு வாகனத்தில் உள்ள டிரைவரை பார்த்து கெட்ட கெட்ட வார்த்தையிலும் திட்டுகிறார்கள்.
மேலும், பல வாகனங்களை அவர்கள் அடுத்தடுத்து ஓவர்டேக்கும் செய்கிறார்கள். அதீத வேகத்தில் அசால்ட்டாக காரை இடதுபுறம், வலதுபுறம் என நகர்த்தி ஓவர்டேக் செய்கிறார்கள். இதை பார்க்கு்ம போது நமக்கே நெஞ்சம் பதைபதைக்கிறது. சரியாக அப்போது தான் அந்த கொடூரம் நடக்கிறது. திடீரென ஒரு திருப்பத்தில் பிரேக் சத்தம் கேட்கிறது. அந்த பலத்த சத்தத்துடன் வீடியோ முடிவடைகிறது. கடைசியில் என்ன நடந்தது என்பது அந்த வீடியோவில் தெரியவில்லை.
விபத்து: அதன் பின்னரே அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. அவர்கள் தேசிய நெடுஞ்சாலை 48இல் அகமதாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் குஜராத்தில் உள்ள அடாஸ் என்ற பகுதியில் ஒரு திருப்பத்தில் விபத்தில் சிக்கியுள்ளனர். அதீத வேகம் காரணமாக டிரைவரால் காரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த மரத்தில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த மே 2ஆம் தேதி அதிகாலை 3.30 முதல் 4.30 மணியளவில் நடந்ததாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ இப்போது தான் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
உயிரிழப்பு: இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அகமதாபாத்தை சேர்ந்த அமன் மெஹபூபாய் ஷேக் மற்றும் சிரக்குமார் கே படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. படுகாயமடைந்த மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் முஸ்தபா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications