"சிக்னல் கோளாறு".. தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதிய இன்னொரு ரயில்.. ஜார்கண்ட்டில் கோர விபத்து
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. அதன் பெட்டிகள் பக்கத்து தண்டவாளத்தில் கிடந்தபோது அதில் மோதி இன்னொரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 20 பெட்டிகள் சிதறி கிடப்பதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சண்டில் ரயில் நிலையம் அருகே இன்று காலை 4.15 மணிக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் புருலியா நோக்கி சென்றது. அப்போது திடீரென்று சரக்கு ரயில் தடம் புரண்டது.

ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. சில பெட்டிகள் அருகே செல்லும் இன்னொரு தண்டவாளத்தில் விழுந்தது. இந்த வேளையில் அந்த தண்டவாளத்தில் இன்னொரு ரயில் வந்தது. ஏற்கனவே தடம்புரண்ட ரயிலின் பெட்டியின் மீது அந்த சரக்கு ரயில் மோதியது.
இதனால் ஒரே இடத்தில் 2 சரக்கு ரயில்களும் விபத்துக்குள்ளாகின. மொத்தம் 20 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. விபத்துக்குள்ளான 2 ரயில்களும் சரக்கு ரயில்கள் என்பதால் அதிர்ஷ்வடசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் 2வது ரயில் விபத்துக்குள்ளானதற்கு சிக்னல் கோளாறு காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வுருகிறது. ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். இந்த விபத்து காரணமாக தண்டவாளம் 200 மீட்டர் தூரத்துக்கு சேதமாகி உள்ளது. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வுருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சண்டில் - டாடா நகர், சண்டில் - முரி, சண்டில் - புருலியா - போகரோ வழித்தடங்களுக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களுக்கு ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் பல ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எந்தெந்த வழித்தடங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அந்த வழித்தடங்களுக்கு பஸ் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications