பகீர்.. கால் பாதத்தை நாக்கால் தடவ செய்து மாற்றுத்திறனாளி சித்ரவதை.. 2 பேரை கைது செய்த ஒடிசா போலீஸ்!
புவனேஸ்வர்: மாற்றுத்திறனாளி ஒருவரை மிரட்டி தங்கள் கால் பாதத்தை நாக்கால் சுத்தம் செய்ய வைத்த இரண்டு மனித மிருகங்களை ஒடிசா போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியா நாகரீகம் அடைந்த நாடு என்று மார்த்தட்டி சொல்லிக் கொண்டாலும், ஆங்காங்கே நிகழும் சில மனிதநேயமற்ற சம்பவங்கள் இன்னும் முழுமையான நாகரீக வளர்ச்சியை நாம் அடையவில்லை என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. அப்படியொரு சம்பவம்தான் ஒடிசாவில் நிகழ்ந்திருக்கிறது.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாரிபாடா நகரில் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சமூக விரோதிகள் அவ்வப்போது வருவதும், அடாவடித்தனத்தில் ஈடுபடுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த போதை மறுவாழ்வு மையத்துக்கு ரவுடிகள் இருவர் வந்து அங்கு வைத்தே மது அருந்தி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். போதை தலைக்கேறியதும் அங்கு சிகிச்சை பெற வந்தவர்களை ஒவ்வொருவராக அழைத்து வயது வித்தியாசம் பார்க்காமல் அவர்களை எடுபிடி வேலை செய்ய வைத்துள்ளனர்.
அப்போது அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளியை, தங்கள் கால் பாதங்களை நாக்கால் சுத்தம் செய்யும்படி அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு அந்த மாற்றுத்திறனாளி நபர் மறுக்கவே, அவரை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், சொன்னதை செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன அந்த நபர், வேறுவழியின்றி தனது நாக்கால் அவர்களின் ஒருவரின் கால் பாதத்தை சுத்தம் செய்தார். பின்னர் உடனடியாக தனது நாக்கை தண்ணீரால் அவர் கழுவ முயன்றிருக்கிறார். ஆனால் அவரை விடாத அந்த ரவுடி, தான் போதும் என்று சொல்லும் வரை தனது பாதத்தை நாக்கால் சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளான். இதையடுத்து அழுதுகொண்டே அந்த நபரும் அவனது பாதத்தை நாவால் சுத்தம் செய்தார்.
இந்த சம்பவத்தை அந்த மையத்தில் இருந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அந்த ரவுடிகளின் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகள் இருவரை போலீஸார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications